எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கனவுகள்

இரவு கருத்ததும்
கலங்கரை விளக்காய்
ஒளிவிடத் தொடங்குகின்றன
இன்றைக்கான கனவுகள்.

ஒளிர்ந்த விளக்குகள்
பிடறி சிலிர்க்கும்
சவாரிக் குதிரைகளாய்
காற்றில் பறக்கின்றன.

ஆசைக்காற்றில் உப்பி
வண்ண பலூன்களாகி
பருக்கத் தொடங்குகின்றன
கடல் மண்ணிலிருந்து.


பலூன்களைப் பிடித்துச்
செல்லும்போது பறக்கும்
வெப்பக்காற்று பலூன்களாகி
உயரத் தூக்குகின்றன.

வளைந்து திகிலோடு
வாய் உலரப் பறக்கையில்
வால் முளைத்த
பட்டங்களாகின்றன.

வால் நிலவில் மாட்ட
பட்டம் மேகமலையில் முட்டி
மாஞ்சா அறுந்து கிடக்கிறது., விடியலில்
கடல் அலையைப் பார்த்தபடி.

அடுத்த இரவுக்காய்க்
காத்திருக்கின்றன கனவுகள்
பறப்பதற்குப் புதிதான
வாகனங்களை எதிர்நோக்கி..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 17, செப்டம்பர் 2011 திண்ணையில் வெளிவந்தது

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...