எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மாமியார் மருமகள் உறவுமுறை..

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.


இன்றைய காலகட்டத்தில் மாமியார் மருமகள் உறவு என்பது எப்படி இருக்கு?. மாமியார் வெர்சஸ் மருமகளான்னு கேட்டா சே ..சே எங்களுக்குள்ள கருத்து வேறுபாடே கிடையாது என்பார்கள். தனித்தனியா உங்க மாமியார் கிட்ட உங்களுக்குப் பிடிச்ச பிடிக்காத விஷயம், உங்க மருமகள் கிட்ட உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது சொல்லுங்கன்னு சொன்னா கொஞ்சம் சொல்லுவாங்க. அப்போ தெரியவரும் நிறைய விஷயம். அது கணவன் மனைவி உறவு போல பொக்கிஷமானது. கணவனை முக்கியமா கருதுற எந்தப் பெண்ணும் மாமியாரை அவ்வளவு முக்கியமா கருதுறாங்கன்னு சொல்ல முடியாது. அது போல தன்மகனுடன் கூடி வாழ வந்த பெண்ணுக்கு உரிய ஆசைகளை அங்கீகரிக்கும் மாமியார்களும் இப்போ இப்போதான் அதிகரிச்சுகிட்டு வர்றாங்க.

ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலக் கையாள வேண்டியது மாமியார் மருமகள் உறவுமுறை. கை தவறிப் போட்டா உடைஞ்சி போயிடும் . அப்புறம் ஒட்டவே ஒட்டாது. விரிசல் கூட விழாம பார்த்துக் கொண்டால்தான் அதில் குடும்பம் என்னும் பூங்கொத்தை அடுக்க முடியும்.

சில வீடுகளில் ஒரே பையன் இருப்பதால் அவரின் பெற்றோர்களும் அவர்கள் கூடவே இருப்பார்கள். இந்த மாதிரி ஒரு பையனாகட்டும். அல்லது இன்னும் சில குழந்தைகளோடும் கூட்டுக்குடும்பமா இருக்கும் வீட்டில் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வேலை பார்த்து புரிஞ்சு நடந்துகிட்டா பிரச்சனை இல்லாம இருக்கும். அங்கே ஒரு மருமகள் ரொம்ப வேலை செய்தும் இன்னொரு மருமகள் ஒண்ணும் செய்யாம இருந்தா அதையும் மாமியார் கண்டுக்காம இருந்துட்டாங்கன்னா பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சிடும். ஒரு கூட்டுக் குடும்பத்தில் தலைமை ஏற்கும் தாய் அந்த வீட்டின் மகாராணி என்றால் வந்த மருமகள் எல்லாம் தன் மகனோடு வாழ வந்த இளவரசி மாதிரி நடத்தப்பட வேண்டும். எந்தப் பிரச்சனையிலும் யார் விட்டுக் கொடுத்துப் போவது என பிடிவாதம் பிடிக்காமல் இருவரும் விட்டுக் கொடுத்துப் போகும் தன்மையையும் புரிந்து கொள்ளும் தன்மையையும் வளர்த்துக்கணும்.

தனக்கு தேவை இருக்கும் வரை அட்ஜஸ்ட் செய்து போவது பின் திரும்பிக் கொள்வது போன்ற மன நிலைகள் களையப்படணும். வடநாட்டில் எல்லாம் ஒரே குடும்பமாகத்தான் நிறைய வாழ்றாங்க. வீட்டு வாடகை இன்ன பிற விஷயங்களுக்காக என்றாலும் தேவை ஏற்பட்டா சேர்ந்து வாழ விரும்புற நாம எல்லா கால கட்டத்திலும் சேர்ந்து வாழ முற்படணும். குடும்பத்தை விட்டு வெளியூர் மாற்றல், வெளிநாட்டில் உத்யோகம்னு வந்தா போறது தவிர்க்க இயலாதது.

மாமனார்களுடன் பெண்களுக்கு அவ்வளவு கருத்து வேறுபாடு வர்றதில்லை. மாமியார் மருமகளுக்குள்ள மட்டும்தான் அந்த மகன்/கணவன் தங்களோட ப்ராபர்ட்டியா மட்டும் பார்க்கப்படுறதால இது உரிமைப் போராட்டம்தான், யார் விட்டுக் கொடுத்துப் போறதுன்னா இந்த விஷயத்துல மாமியார்தான் விட்டுக் கொடுத்துப் போகணும். அது போல கணவன் மனைவி சண்டை போட்டாங்கன்னா அவங்களா சமாதானம் ஆக விடணும். தான் உள்ளே நுழைந்து சண்டையை இன்னும் பெரிதாக ஆக்கிவிடாமல் இருக்கணும். தன் மகனோடு தன்னுடைய வாழ்நாளைக் கழிக்க வந்த பெண்ணை வாழவிடணும். மகனுடைய இனிமையான இல்லறத்தை விரும்பும் அம்மாக்கள் விட்டுக் கொடுத்துப் போறவங்களா இருப்பாங்க.

மாமியார் என்பவர் தன்னுடைய இன்னொரு அம்மா போல கருதப்படணும். தன் அம்மாவிடம் எப்படி உரிமையுடன் நடந்து கொள்வோமோ, உதவி செய்வோமோ அதே போல அவருக்கும் செய்யணும். அவரும் தன் மகள் போல மருமகளை நடத்தணும். தவிர மகள் என்றால் ஒரு நீதியும் மருமகள் என்றால் இன்னொரு நீதியும் வழங்கினால் அவர் பாரபட்சமுள்ள நீதி தேவதை போலத்தான். சின்னவங்க தப்பு செய்தா திருத்தணும் . தண்டிக்கக் கூடாது.

மருமகள் இன்னொரு வீட்டின் செல்லப் பெண்ணா படிப்பு மட்டுமே முக்கியம்னு படிக்க வைக்கப்பட்டு வேலைக்கு போய் திருமணமாகி வந்திருக்கலாம். அவருக்கு சமையல் எல்லாம் பயிற்றுவிக்கப்பட்டிராமல் இருக்கலாம். வயதும் அனுபவமும் இன்மையால சில சமயம் எதிர்மறையான கருத்துக்களையும் எங்க அம்மா வீட்டுல இப்படிதான் செய்வாங்க. என்பது போன்ற வார்த்தைகளையும் உதிர்க்கலாம். தேவை ஏற்படும் தருணங்களில் அவருக்கு சமையல் பயிற்றுவிக்கலாம். ஏளனமாகவோ, கிண்டலாகவோ ஏதும் சொல்லி மனம் புண்படாத வகையில் அவரை உணரச் செய்வது முக்கியம். அதற்கு வயதுப் பக்குவமுள்ள மாமியாரின் தன்மையான சுபாவமே கை கொடுக்கும்.

மருமகள்களும் தன் மாமியார் வயதானவர்கள், தன் கணவரையும் மற்ற குழந்தைகளையும் வளர்த்தவர்கள், முதுமையின் படியில் ஏறத் துவங்கி உள்ள அவருக்கு தோள் கொடுத்து அவரின் பிணியும் மூப்புமான காலகட்டத்தில் அவரை அரவணைத்துச் செல்லுவோம் என எண்ண வேண்டும். பெரியவர்களிடம் ஒரு பழக்கம். அவர்கள் சொன்னதை சொன்னபடி செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவது. இதில்தான் காண்ட்ரவர்சியே ஆரம்பிக்கிறது.

இதுவரை மாமியார்கள் தங்கள் மகனுக்குப் பிடித்ததை செய்து கொடுத்து இருப்பார்கள். மருமகள் வந்ததும் அவருக்குப் பிடித்ததையும் செய்ய ஆரம்பிப்பார். அப்போது தடுக்காமல் தன் மனதுக்குப் பிடித்ததை தன் கணவனுக்கு செய்து தர மாமியார்கள் அனுமதிக்க வேண்டும். டக் ஆஃப் வார் போல தன் பக்கமே மகன் இருக்க வேண்டும் என எல்லா விஷயங்களிலும் வீண் பிடிவாதம் செய்வதை மாமியாரும். தன் பக்கமே இருக்க வேண்டும் கணவர் என பெண்கள் எதிர்பார்ப்பதையும் குறைக்க வேண்டும்.

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். அது WHITE LIES எனப்படுவது. தேவை இருக்கிறதோ இல்லையோ. அடுத்தவர்கள் செய்யும் காரியத்தை எல்லாம் தன் நோக்கில் காரணம் கற்பித்து அதை உண்மை போல அடுத்தவரிடம் சொல்வது. கோள் மூட்டுவது, புரணி பேசுவது எனச் சொல்லலாம், இதை. யாருக்கும் கெடுத்தல் விளைவிக்காவிடினும் எண்ணங்களை மாசுபடுத்தக் கூடிய இச்செயல்களையும் கண்ணோட்டத்தையும் தவிர்ப்பது அவசியம். ஜாடை பேசுவது. குத்திக் காண்பிப்பது என்பது எல்லாம் இதன் கீழ்ப் படிகள்.

குடும்ப இறையாண்மை முக்கியம்னு கருதும்போது இந்தமாதிரி வேண்டாத அபிப்பிராய பேதங்கள் களையப்படணும். தான் மருமகளா வந்த போது என்ன மனநிலையில் இருந்தோம் என்பதை ஒரு மாமியாரும்., தான் மாமியாரானா தன்னோட மருமகள் தன்னிடம் எப்படி இருக்கணும்னு தான் விரும்புவோம் என்பதையும் மாமியாரும் மருமகளும் உணர்ந்தாங்கன்னா பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை.

நிறைய மருமகள்களும் மாமியார்களும் ஒத்துமையாதான் வாழ்றாங்க. ஒன்றாக உடை எடுப்பது, கடைகளுக்கு ஷாப்பிங் போவது, பிடித்த உணவுகளை வாங்கியோ, சமைத்தோ கொடுப்பது, மருந்து மாத்திரைகள் வாங்கி ஒழுங்காக டயத்துக்குக் கொடுப்பது, உறவினர் இல்லங்களுக்கு சென்று வருவதுன்னு பிரச்சனை இல்லாமதான் போய்க்கிட்டு இருக்கும். இதில் மருமகள் வேலைக்குச் செல்பவராக இருந்து வீட்டையும் மாமியாரையும் சரிவர கவனிக்க முடியாட்டாலும் மேலும் நீ/நீங்க என்ன சொல்றது நான் என்ன கேக்குறது என்ற மனோபாவங்களாலும்தான் மாசடைகிறது. யாரும் யாரையும் கட்டுப் படுத்தி கைக்குள்ள வைச்சுக்கவே முடியாது. முடிந்த போதுவேலைகளைப் பகிர்ந்து யாராவது செய்து கொள்ளவேண்டும்.

வீட்டிற்கு மருமகளின் உறவினர்கள் வரும்போது மாமியாரும், மாமியார் வீட்டைச் சேர்ந்தவர்கள் வரும்போது மருமகளும் பரிவோட கவனிச்சுகிட்டா இந்த ஒற்றுமை உணர்வுகள் இன்னும் அதிகரிக்கும். என் மாமியார் போல யாரும் உண்டா என மருமகளும், என் மருமகள் போல யாரும் உண்டான்னு மாமியாரும் நினைக்கணும்.

முதுமையில் இருக்கும் மாமியாருக்கு உடல் ரீதியான கோளாறுகள், மனரீதியா தான் ஒதுக்கப் படுகிறோம் என்ற எண்ணங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு மருமகளின் கடமை. அது போல மருமகளுக்கும் குடும்ப ரீதியான கடமைகள், மாதாந்திரத்தொந்தரவுகள், அலுவலகத்தொந்திரவுகள், அவள் உடல் நிலை பிரச்சனைகள் என்று இருக்கும் போது உதவுவதும் புரிந்து கொள்வதும் மாமியார்களின் கடமை.

இன்றைய மனிதர்கள் கிட்ட இருக்கிற இன்னொரு மனோபாவம், WE CANT TAKE RESPONSIBILITY . இது கைக்குழந்தைகளோட தனியா இருக்க தம்பதிகளுக்கு அவங்க குடும்பத்துப் பெரியவங்களே உதவாத மனோ நிலை. அம்மாவாகட்டும், மாமியாராகட்டும் விதி விலக்கில்லை. அதேபோல வயதில் முதிர்ந்து நோயுற்றிருக்கும் பெற்றோரை பெண்ணும் சரி, பிள்ளையும் சரி பார்க்க முடியாமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பது.

ஹோம்களில் இருப்பது இப்போதெல்லாம் வசதிக்கு உரியதாகி வருகிறது. கைக்குழந்தைகளுக்கு க்ரீச் மாதிரி பெரியோர்களுக்கு முதியோர் இல்லங்கள், நாம் மட்டும் வாழ உயிர்ப்பு இல்லாத கான்க்ரீட் வீடுகள் என்னும் காடுகள். நம் பிள்ளைகளுக்கு பெரியவர்களின் அரவணைப்பு, வழிகாட்டுதல் வேண்டும். அவர்களின் நீதி நெறிக் கதைகள், நம் குடும்பப்பாரம்பர்யம், உழைப்பு, பெருமை, இறை பக்தி இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஈசாப் கதைகளில் வருவது போல பெரியோர்கள் நமக்கு முக்கியம். நம் பாரம்பர்யத்தின் கிளைகள் பிள்ளைகள் என்றால் வேர்கள் நம் தாய் தந்தையரும், மாமனார் மாமியாரும்தான். வேர்கள் இல்லாமல் நாம் எப்படி விளைந்து நிற்க இயலும்.

வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகள் இல்லத்துக்கு ஆசையோடு செல்லும் சிலர் சித்ரா திவஹருண்ணியின் கதையில் வருவது போல பொருந்திக் கொள்ள சிரமப்படுகிறார்கள். அவர்களின் இந்தியப் பழக்கவழக்கங்களை கைக்கொள்ள இயலாமலும். விட இயலாமலும் ஒரு இரட்டை மனோ நிலையில் ஊஞ்சாலாடுகிறார்கள், முடிந்தவர்கள் பொருத்திக் கொள்கிறார்கள். முடியாதவர்கள் திரும்பி விடுகிறார்கள் தாய் தேசத்திற்கே.

முதுமையில் இருக்கும் பெற்றோருக்கு வெளிநாட்டில் இருக்கும் மகன் மூலம் நிறையப் பணம்கிடைக்கிறது. ஆனால் பாசம் என்பது அவர்கள் அனைவரும் கூடி இருக்கும் சமயத்தில் கிடைப்பதுதானே. முடிந்தவரை மகனும் தன் தாய் தந்தையர் மணம் கோணாமலும், மனைவிக்கு சிரமமளிக்காமலும் சிக்கல்கள் வராமல் கையாள வேண்டும்.

எந்த உறவிலும் உடல் ரீதியான சங்கடங்களைப் புரிந்துகொண்டு மனரீதியான சங்கடங்கள் ஏற்படாவண்ணம் நடந்துகிட்டா அது ரொம்ப சக்சசிவான உறவுதான். அபிப்ராய பேதம் ஏற்படும்போதே தகுந்த விளக்கங்கள் சொல்லப்பட்டு புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் . அது பெரிதாகி பூதாகாரமாகிவிடாமல் பார்த்துக்கணும்.

வரதட்சணை விஷயம். சீர் விஷயம் போன்றவற்றுக்குஎல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பேசி உறவில் விரிசல் ஏற்படாம பார்த்துக்கணும். யார் கொடுத்தும் யாருக்கும் நிரம்பப் போவதில்லை, நாம் உழைத்துச் சேர்க்கும் பணத்தைத்தவிர.

எங்கே இனிமையும் சுதந்திரமும் இருக்கிறதோ அதை நாடுவதுதான் மனித இயல்பு. அடுத்தவரின் சுதந்திரத்தை மதித்தும், இருப்பை நேசித்தும் வாழும் வீட்டில் மாமியாரும் மருமகளும் தங்கள் தங்கள் சுயங்களோடு தாங்களாகவே இயங்க முடியும். வெற்றிகரமான இல்லறத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்த முடியும்.

வருடம் ஒரு முறை மாமியாரை விஷேஷ தினங்களில் சந்திக்கும்போதும் நன்கு கலந்து உறவாடாமல் ஒதுங்கி இருக்கும் சின்னப் பெண்களே இந்தக் கருத்தை எல்லாம் படிச்சிட்டு உங்க எண்ணங்களை மாத்திக்குங்க. என்னைக்கும் மாமியார் வெர்சஸ் மருமகளா இல்லாமல் அவங்கள உங்க தாயா நினைச்சு அவங்க உங்கள மகளா நினைத்து அன்பு செலுத்தும்படி வாழுங்கள்.


8 கருத்துகள்:

  1. எத்தனை விஷயங்கள். அலசி ஆராய்ஞ்சு எழுதி இருக்கிறீர்கள் தேன்.
    இதை மாமியார் மருமகள் இருவரும் உணர வேண்டும்.
    முதலில் தமிழ் படிக்கத்தெரிந்த மருமகள் வேண்டும்:)

    பதிலளிநீக்கு


  2. இந்த மாமியார் மருமகள் உறவு ஒரு நூல் போன்றது.
    இந்த நூல் ஒரு தடவை அறுந்து போனாலும் பின் ஒட்ட வைத்துக்கொண்டாலும், அதில் ஒரு
    முடிச்சு போட்டுக்கொண்டாலும் ( இரண்டு பக்கமுமே சரிதான், லெட் பாஸ்ட் பி பாஸ்ட், லெட்
    அஸ் பி ஃபார்வேர்டு லுகிங் ) என்று தீர்மானம் செய்து கொண்டாலும், அந்த முடிச்சு என்னவோ
    அப்படியே இருந்து மனசை ( ஐ மீன் இரண்டு பேர் மனசுயுமே ) உறுத்திக்கொண்டே தான் இருக்குமோ என்னவோ//

    மாமியார்கள் துவக்கத்தில் செய்த த்வம்சத்தை நினைவில் வைத்துக்கொண்டு, தமக்கு வரும் காலத்தில்
    பழிக்குப் பழி தீர்க்கும் மாட்டுப்பெண்களும் நமது சமூகத்தில் நமது குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    கத்திக் கத்திக் கொத்தியதைக் குத்திக் குத்திக் காட்டும் நிலை இன்று. வேதனையாக இருக்கிறது.

    அது சரி !! நம்ம சமூகத்திலே பையனோட தான் அம்மா அப்பா தன் வாழ் நாளைக் கழிக்கவேண்டும், பெண் என்னவோ
    இன்னொரு வீட்டுக்கு போய்விட்டாள், அவள் அப்பப்ப வருவாள், நாமும் அப்பப்ப போலாமே தவிர அவளும்
    இங்கேயே இருக்க முடியாது, அம்மா அப்பாவும் அங்கேயே இருக்க இயலாது என்ற சம்பிரதாயம் சரிதானா ?

    ஒரு அம்மா தன் பெண்ணுடனே தன் வாழ் நாட்களை இணைத்துக்கொள்ளக்கூடிய சம்பிரதாயம் நமது
    தமிழ் சமூகத்திலே ஏன் உருவாக வில்லை?

    பெற்ற செல்வங்கள் யாவருமே ( என் நண்பருக்கு மூன்றும் பெண்கள்) பெண்களாக இருந்தால்,
    வயதான காலத்தில் ( ஃஃபைனான்சியல் பிராப்லத்தை விடுங்கள்) எமோஷனல் சப்போர்ட்
    அம்மா அப்பாக்கள் ரொம்பத்தான் கஷ்டப்படுகிறார்கள்.

    ஒரு சமயம் நினைச்சுப்பார்த்தால், பொண்ணைப்பெத்தவன் பாபப்பட்ட ஜன்மமோ என்று
    தன்னைத் தானே நொந்து கொள்ளவேண்டிய நிலையும் இருக்கிறது என என் நண்பர்கள் நிலையைப்
    பார்க்கும்பொழுது தெரிகிறது.

    ஒரு பக்கம் பெண்கள் வீட்டுக்கு போயும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. பையன் வீட்டிலே மனசுக்கு
    பொருத்தமான சூழ் நிலை இல்லை.
    எங்கே தான் போவார்கள் ?

    அனாதை என்று சொல்லிக்கொண்டு ஓல்டு ஏஜ் ஹோம் போனால் பையனுடைய நேம் டேமேஜ் ஆகிவிடும்.
    அதற்கும் பயம்.


    இது பற்றி உங்கள் கருத்தென்ன ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. //எங்கே இனிமையும் சுதந்திரமும் இருக்கிறதோ அதை நாடுவதுதான் மனித இயல்பு. அடுத்தவரின் சுதந்திரத்தை மதித்தும், இருப்பை நேசித்தும் வாழும் வீட்டில் மாமியாரும் மருமகளும் தங்கள் தங்கள் சுயங்களோடு தாங்களாகவே இயங்க முடியும். வெற்றிகரமான இல்லறத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்த முடியும்.//

    அருமையாச் சொன்னீங்க தேனக்கா. அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பதில்தானே பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. //ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலக் கையாள வேண்டியது மாமியார் மருமகள் உறவுமுறை. கை தவறிப் போட்டா உடைஞ்சி போயிடும் . அப்புறம் ஒட்டவே ஒட்டாது. விரிசல் கூட விழாம பார்த்துக் கொண்டால்தான் அதில் குடும்பம் என்னும் பூங்கொத்தை அடுக்க முடியும்.//

    மிக அழகான வார்த்தைகள்!

    அவரவர்கள் எல்லை அறிந்து நடந்தால் சமாளிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்தவர்களை ஒப்பிடுவதே பிரச்சனையின் ஆணி வேர்...

    மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆண்களும் பாவம்...

    நல்லதொரு அலசலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. நன்றி வல்லி சிம்ஹன்.. தமிழ்படிக்கத் தெரிந்த மருமகள் .. ஹாஹா வாலிட் பாயிண்ட்..:)

    ஒரு பக்கம் பெண்கள் வீட்டுக்கு போயும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. பையன் வீட்டிலே மனசுக்கு
    பொருத்தமான சூழ் நிலை இல்லை.
    எங்கே தான் போவார்கள் ?/// சரியா சொன்னீங்க சுப்பு சார்.. ஆமாம் பையன் பேர் கெட்டுவிடும்.. ஆனால் இப்ப சிலர் போகத்தான் செய்றாங்க.. யாருக்கும் தொந்தரவு இல்லாம உடல் ஒத்துழைக்கும் வரை நம்ம ஊர்ல மாமியாரும் மருமகளும் வேற இருந்து வடிச்சு உண்பது நல்லது என்பது என் கருத்து.

    நன்றி சாரல்

    நன்றி ரஞ்சனிம்மா

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு
  7. மாமனார்கள் என்ன ரொம்ப நல்லவர்களா அல்லது பாவப்பட்ட ஜன்மங்களா ? எவ்வளவோ இடங்களில் மாமியார், நாத்தனார், மற்றும் மாமனார் நல்லவர்காக இருந்தாலும், மருமகளுமே நல்லவளாக இருந்தாலும் மகன் என்பவன் குடும்ப உறவுகளை கெடுப்பவனாகவும் பணம் பிடுங்கியாகவும் இருந்தால் என்ன செய்வது ?எல்லாமே நம் மனதை பக்குவப்படுத்திக்கொண்டு சீரான வழியில் வாழ்க்கையை செலுத்துவதில் தான் இருக்கிறது.இரு தரப்பிலும் அமைதியாக இருப்பது பல பிரச்சனைகளை தீர்க்கும்.முக்கியமாக பெண்ணை பெற்ற தாய் பெண்ணுக்கு அறிவுரை சொல்வதிலும் அதை பெண் கேட்பதிலும் தான் எல்லாமும் அடங்கி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. எவ்வளவு படித்த பெண்ணாயினும், மாமியார் என்னும் நிலையில் தன் ஆதிக்கத்தை காட்டுவதை விட்டு அன்பை காட்டினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...