எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 நவம்பர், 2016

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும். ( அவள் விகடனில் )

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும் :-

அவள் விகடன் இணைப்பில் இங்கேயும் படிக்கலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு யுக்திகள்!

அம்மி கொத்துறோம், அருகாமனை சாணை பிடிக்கிறோம்., சவுரி முடி வேணுமா, கூடை சேர் பின்னித் தரோம் என்று சொல்லி என்று வேவு பார்த்து உளவு சொல்லி கிராமப்புறங்களில் தனியா இருக்கும் இல்லத்தரசிகளைக் குறிவைத்து வீட்டில் கொள்ளை நடக்கிறது.  நகை பாலீஷ் பண்ணித் தரோம் என்று சொல்லி அவர்கள் கரைக்கும் சொல்யூஷனில் நகையை உருக்கி எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.

”ஒரே வெய்யில் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் தாங்க  ” என்று விற்பனைப் பிரதிநிதி உடையில் கேட்ட ஒரு பெண்ணிற்கு இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பெண்ணைப் பின் தொடர்ந்து அவரும் இன்னும் சிலரும் உள்ளே வந்து கத்தியைக் காண்பித்து போட்டிருந்த நகைககளைக் கழட்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பேசி அப்பா அம்மா மற்றும் வீட்டு விபரத்தை விசாரித்து வீட்டுக்கு வந்து அந்தப் பெண்ணின் அம்மாவிடம் அவரது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை ரேஷன் சாமான் வாங்க அனுப்பியதாகச் சொல்லி ரேஷன் கார்டு பணம் பைகள் வாங்கி  ஒரு ஆள் எஸ்கேப்பாகிவிட மாலை வரை பொருட்கள் வரும் என்று அந்தத் தாய் காத்திருக்கிறார். மகளும் கணவரும் வந்த பின்தான் உண்மை தெரிந்திருக்கிறது ஏமாந்தது.

இப்பவெல்லாம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது பெருகி இருக்கிறது. அமேசான்லேருந்து வர்றோம் என்று சொல்லி சில நாள் முன்பு பொருளை டெலிவரி கொடுப்பது போல வந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சி ஊட்டியது.

பசுமாட்டுப் பால் கொடுக்கிறோம் என்று சொல்லி ஒரு நபர் 32 குடும்பங்கள் இருக்கும் ஃப்ளாட்ஸில் வந்து ஒரு பேப்பரில் ஃபோன் நம்பர் வாங்கிச் சென்றுள்ளான். கீழே செக்யூரிட்டி இருப்பதால் கேட்டுத்தான் வந்திருப்பான் என்றும் நல்ல பால் கிடைக்கும் என்றும் நம்பி பலர் ஃபோன் நம்பரைக் கொடுக்க சில நாட்களில் ஒவ்வொருவருக்கும் ஆபாச போன் கால்கள் வரத் தொடங்கி உள்ளன. சுதாரித்து சைபர் க்ரைமில் புகார் செய்துவிடுவோம் என ஒரு பெண் மிரட்ட இப்போது அடங்கி விட்டதாம்.

யாரும் இல்லாதபோது கொள்ளையடித்ததை விட தனியாக இருக்கும் இல்லத்தரசிகள்,வயதான பெண்மணிகளின் நகைகளைப் பறித்துச் செல்வதும் கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.

இதற்கெல்லாம் தீர்வு என்ன. ?

வீட்டின் கதவில் ஐ ஹோல் பொருத்தவேண்டியது அவசியம். தனி வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகள் கட்டாயம் கண் திறப்பில் பார்த்துவிட்டுத்தான் திறக்க வேண்டும்.

சர்வயலன்ஸ் காமிரா பொருத்துவது சாலச் சிறந்தது. தோட்டம் கேட் என இருந்தால் கேட்டைப் பூட்டி வைக்கலாம்.

நாய் போன்ற காவல் ப்ராணிகள் வளர்ப்பதும் பாதுகாப்பானது.

எல்லாக் கதவுகளுக்கும் லாக் சரியாக இருக்கா என செக் செய்து கொள்ள வேண்டும். ரொம்பப் பெரிய தனி வீடு என்றால் எமர்ஜென்ஸி அலாரம் செட் செய்வது நல்லது.

வீடுகள் தள்ளித் தள்ளி அமைந்திருந்தால் அதிகாலையிலோ, மாலை ஏழு மணிக்கு மேலோ வாக்கிங் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தனி வீடும் சுற்றிலும் தோட்டமுமாக இருந்தால் ஜன்னல் கதவுகள் வாசல் கதவுகளை தாளிட்டு வைப்பது நல்லது.

பவர் பாக்ஸையும் பூட்டினால் நல்லது. இன்வர்டர் நன்கு வேலை செய்கிறதா என்பதையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றி செக் செய்ய வேண்டும்.

கை பேசி எண்ணை தெரியாத யாரிடமும் கொடுக்கவே கூடாது. தொடர்ந்து தொல்லைகள் வந்தால் சைபர் போலீஸில் புகார் செய்துவிடுவோம் என்று எச்சரிக்கை செய்யவேண்டும்.

குழந்தைகள் தெரியாதவர்களிடம் வீட்டு விஷயம் , கைபேசி எண், அட்ரஸ் போன்றவற்றைச் சொல்லக் கூடாது என்று பழக்க வேண்டும்.

ஃப்ளாட்ஸில் இருப்பவர் என்றால் செக்யூரிட்டியிடம் தெரியாத நபர்கள் ,ஆட்டோக்கள் , வண்டிகள் வந்தால் நுழைவுப் புத்தகத்தில் பேர் எழுதச் சொல்லியும் கைபேசி எண்ணை வாங்கியும் வைக்கச் சொல்ல வேண்டும்.

வேலை செய்பவர் பல வருஷம் வருபவர் என்றாலும் செக்யூரிட்டிகளுக்கு என தனி அமைப்பு , அனுமதி கார்டு இருப்பதைப் போல வேலை செய்பவர்களுக்கும் ஏதேனும் ஆதாரத்தை ஜெராக்ஸ் காப்பி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பயணம் செய்யும்போதோ பொது இடங்களிலோ தங்களைப் பற்றிய, கணவர், குழந்தைகளைப் பற்றிய , வீட்டைப் பற்றிய விவரங்களை, தாங்கள் செல்லுமிடங்கள் வருமிடங்களைப் ஃபோனில் உரத்துச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். .

அதிகப்படியான பணத்தை வீட்டில் வைக்காமல் தங்கள் வங்கிக் கணக்கிலே வைப்பது நல்லது. ஏடிஎம் கார்டு மூலமாக தேவையான பணத்தை மட்டுமே அவ்வப்போதுஎடுத்துக் கொள்ள வேண்டும்.

புது வீட்டுக்குச் என்றபின் பழ வியாபாரி, காய்கறி, பூக்காரர், பால்காரர், அயர்ன் செய்பவர், பேப்பர்காரர், இண்டர்நெட் , தொலைபேசி இணைப்பு, தொலைக்காட்சிக்கு டிஷ் இணைப்பு எனப் பலரும் வந்தால் அந்த ஃப்ளாட்ஸில் நம்பிக்கை பெற்றவரிடமே வாங்குங்கள்.

வீட்டுப் பத்திரங்கள், தஸ்தாவேஜுகள், பணம், தங்கம் வெள்ளி வைர நகைகளை வங்கி லாக்கரிலோ சேஃப்டி வேலேட்டுகளிலோ வைத்து விட்டு விசேஷ சமயங்களில் மட்டுமே வீட்டில் வைக்கவேண்டும்.

கார் கேரேஜ், காட்ரெஜ் பீரோ போன்றவற்றில் சாவியை மாட்டித் தொங்கவிடக்கூடாது.

வீட்டில் யாரும் அத்துமீறி நுழைந்துவிட்டால் கைபேசியில் ICE என்று ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து (ICE – NAMES OF THE PERSON என்று போட்டு)  முக்கியமான நபர்களின் (கணவர். குழந்தைகள் , அம்மா அப்பா) எண்களை சேமித்து வைக்க வேண்டும்.

நம்பர் போட்டும் சில ஃபோன்களில் சேமிக்கலாம். இந்த நம்பரைத் தட்டினாலே ஃபோன் முக்கியமானவருக்குப் போகும். வீட்டில் இருப்பவர்கள் தொடர்பு கொண்டால் உடனே எடுக்கும்படி ஃபோனை சார்ஜுடன் வைக்கச் சொல்லுங்கள்.

சர்வயலன்ஸ் காமிராவில் பார்க்கும்போது வந்தவரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தால் செக்யூரிட்டி அல்லது பக்கத்து வீட்டுக்காரருக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவிக்கலாம் அல்லது எச்சரிக்கை செய்யலாம்.

யாருடனும் எனக்கென்ன என்று பழகாமல் இருக்காமல் எமர்ஜென்ஸிக்கு உதவும் அளவுக்காவது பக்கத்து வீட்டுக்காரரின் பேரையும் ஃபோன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வெளியூர் சென்றால் ஒருவருக்கொருவர் வீட்டையும் தனியாக இருப்பவர்களையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.

வீட்ல இருக்கும் பெண்கள் இதை எல்லாம் ஃபாலோ பண்ணி பத்ரமா இருங்க. பாதுகாப்பா இருங்க. 

6 கருத்துகள்:

  1. மிகப் பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமையான யோசனைகள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. நன்றி ரமணி சகோ

    நன்றி மாதவி

    நன்றி மனோ மேம்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி டிடி சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...