எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டைகள்.



பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் இருந்திருக்கு. இப்போ எல்லாம் ஈ கார்ட்தான். அதுவும் வாட்ஸப்பில் எக்கச்சக்கமாகக் குவியும்.

ஆனா போஸ்ட்மேன் கொண்டு வந்து தரும்போது அந்தக் கார்டை வாங்கி யார் அனுப்பி இருக்காங்கன்னு பார்த்து மகிழ்வதில் ஒரு சஸ்பென்ஸும் த்ரில்லும் இருந்ததை மறுக்க முடியாது. நாம் ரொம்ப ஸ்பெஷல் ஆயிட்டமாதிரி ஃபீல் பண்ண வைப்பவை இந்த பர்த்டே கார்ட்ஸ்தான். 

அதுவும் கல்லூரிப் பருவத்தில் அசெம்ப்ளியில் நம்ம பிறந்தநாளை அனௌன்ஸ் செய்து கார்ட்ஸை கலெக்ட் செய்துக்குங்கன்னு ப்ரசிடெண்ட் கத்தையா கார்ட்ஸைக் காட்டும்போது ஏற்படுற உற்சாகத்துக்கு அளவில்லை. பந்தாவாப் போய் வாங்கிட்டு அன்னிக்குப் பூரா கெத்தா அலையிறது J

ரொம்ப முன்னே எல்லாம் தீபாவளிக்கு விதம் விதமா தீபம் கார்ட்ஸும்., பொங்கலுக்குப் பொங்கல்பானை, கரும்பு, விவசாயி, சூரியன் கோலங்கள் ஆகிய கார்ட்ஸும் , புத்தாண்டு கிறிஸ்மஸ் அப்பிடின்னா கிறிஸ்மஸ் தாத்தாவும் மெழுகுவர்த்திகளும் ஸ்பெஷலா இடம் பெற்றிருக்கும்.

அதுவும் பொங்கல் தீபாவளின்னா அநேகமா சாமி பட கார்ட்ஸ்தான். முருகன் ரொம்ப கார்ட்ல இருப்பார். உள்ளே பிரிச்சா ஆறு தாமரையும் முருகனும் இதழ் இதழா எழுந்து வர்றமாதிரி கட் பண்ணி வைச்சிருப்பாங்க. அதுமாதிரி இயற்கைக்காட்சிகள்ல பறவைகள் பூக்களை கட் செய்து தத்ரூபமா நகர்றமாதிரி கட் பண்ணி இருப்பாங்க. அது ஒரு த்ரில் அனுபவம். 

அதே போல் சில மியூசிக் பர்த் டே கார்ட்ஸ திறந்தா அது ஆட்டோமேட்டிக்கா ஹாப்பி பர்த்டே பாட்டெல்லாம் பாடும். ஓராயிரம் தரம் எல்லாரையும் ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே அந்தக் கார்டை மடக்கி மடக்கிப் பிரிச்சு ஹாப்பி பர்த்டே பாடலை ரசிக்கிறது உண்டு.  J
 
மத்த நாட்கள்ல அதிகம் பேசாத அல்லது லெட்டர் காண்டாக்ட் இல்லாத  உறவு முறைகள் கூட இந்த விசேஷ தினங்கள்ல ஒண்ணு கூடி கார்ட் அனுப்பிருவாங்க. ’உங்கள நாங்க மறக்கல’ங்கிறமாதிரி.
அப்பிடி வந்த பல கார்டுகள சேமிக்கல.. இது ஏதோ மிச்சம் மீதி இருந்தத எடுத்துப் போட்டிருக்கேன். J

ஒன்றிரண்டு இதுல திருமண மற்றும் திருமணநாள் வாழ்த்தும், பரிட்சைக்கு வாழ்த்தும், முதல் தரத்தில் வெற்றிபெற்றதுக்காகவும் அனுப்பப்பட்டிருக்கு. 

அதுவும் வசந்திக்கா, சுசீலாம்மான்னு என் மனசுக்குப் பிடிச்சவங்க அனுப்புன கார்டைப் பார்த்ததும் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். சுசீலாம்மாவோட பல கடிதங்கள் வேற இன்னிக்குப் படிச்சேன். இந்தக் கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நின்னுச்சுன்னு நினைச்சா திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகள்ல குறைஞ்சிருக்குன்னு தோணுது. 1998 லேருந்துதான் செல்ஃபோனே உபயோகிக்கிறேன்..அதிலும் 2016 லேருந்துதான் செல்ஃபோனில் இண்டர்நெட் பார்க்கிறேன். இப்போ ஒரு செகண்ட்தான். எல்லாரையும் ரீச் பண்ணிடலாம். ஆனா அப்போ எல்லாமே லெட்டர்தான். J






இந்தப் ஸ்பெஷல் அக்கேஷனல் வாழ்த்துக்களை என் நாத்தனார்கள், கொழுந்தனார்கள் & அவர்கள் குடும்பத்தினர், மாமனார், மாமியார், தோழிகள் ( மீனா, மீனாக்ஷி, உமாமகேஸ் ( பிரபல எழுத்தாளர் ) , சுசீலாம்மா, வசந்திக்கா, எனது மாமா ( மலேஷியாவிலிருந்து மற்றும் உறவினர்கள் அனுப்பி இருக்கிறார்கள். !


டியர் தேன், பெஸ்ட் ஆஃப் லக் – வித் லவ் வசந்தி.

பிரியமுள்ள தேனம்மை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள். அன்பும் ஆசியும், சுசீலா.

பெஸ்ட் விஷஸ் ஃபார் எ ஹாப்பி மேரீட் லைஃப் – லவ் ஃப்ரம் உமாசங்கர் உமாமகேஸ் ( பிரபல எழுத்தாளர் .  

கன்கிராஜுலேஷன்ஸ் ஃப்ரம் அங்கிள். 

தேன் அக்கா டியர்,

பூமணம் நிறைந்திருக்க புதுமணக் கோலத்தோடு
மாமணம் செய்து கொண்ட மணமக்கள் வாழ்க வாழ்க.!
பாமணம் பரப்புகின்ற பைந்தமிழ்க் குறள் வழியில்
ஆதவன் போல் என்றும் அழகொளி பரப்பி வாழ்க.!

அன்புடை நெஞ்சத்தோடு அறநெறி நின்று வாழ்க !
பண்புடை செயலால் என்றும் பார்புகழப் போற்றி வாழ்க !
முன்னவர் பெருமை காத்து முத்தமிழ் போற்றி வாழ்க !
எண்ணிடும் எண்ணமெல்லாம் இனியவே எண்ணி வாழ்க !

வளத்தினைக் கொண்டு என்றும் வகையுடன் சிறக்க வாழ்க !
உளத்தினில் மகிழ்வு பெற்று ஒளிதனைக் கொண்டு வாழ்க !
அளவோடு மக்கள் பெற்று அன்புடன் பேணி வாழ்க !
உளத்தோடு ஒன்றி என்றும் ஒற்றுமை காத்து வாழ்க !

இன்னிசை முழங்கும் இந்த மங்களகரமான சுபவேளையில் பூமாலை கழுத்திலாட, புதுவாழ்வு உள்ளத்திலாட, புன்னகை உதட்டிலாட, பூமாலை ஏற்றிருக்கும் தம்பதி நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க. !

-அன்புத் தங்கை மேரி. 


ரோஜா இதழ் அழகாய்
குங்குமச் சிமிழ் வாயாய்
முத்துப்பல் போலாய்
கண்ணின் மணி அழகாய்
மழலைக் குழந்தை ஒன்றை
நீ ஈன்று எனக்களீப்பாய்
அந்நாளே எனக்குப் பொன்னாளாம்
வாழ்க பல்லாண்டு
வளர்க நம்வாழ்வு – வி முத்து. 
 




இந்தப் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பார்ப்போம்.

இதயங்கள் இணைந்துவிட்டபின் இடைவெளிகள் என் செய்யும் – மேரி. 

EVEN IF YOU HAVE FORGOTTEN ME I WILL REMEMBER YOU FOR EVER – WITH LOVE TO SOMEONE DEAR TO ME - RATHICHANDRIKA .

இனிக்கும் தேனே,

ஆதவனின் கதிரினால்
அன்றலர்ந்த முளரியின்
மது போல மாது நின்
வாழ்வு இனிப்பாக இருக்கும்.
களிப்புடன் நீ வாழ
வசந்தத் தென்றல் வீசும்
பிறந்தநாளன்று பல்லாண்டு
நீடுழி வாழ்க என வாழ்த்தும் ..

அன்பின் ஜோதி.

இனிய மதூ,

காலைப் பூக்கள்
கண் விழிக்கும்
நாளை;
உந்தன்
புதிய நாள் ! – அது
பிறந்த நாள் !

நற்கவிகள் நாளும்
எழுதிட வேண்டும்.
நானுமதை
ரசித்திட வேண்டும்.

நாளும் உனக்கு
நன்மைகள் விளைந்திட வேண்டும் !
நமக்குள் ஸ்நேகம்
வளர்ந்திட வேண்டும் !

பாவை- நீ
வாழிய பல்லாண்டு.

-ப்ரிய மனோ.


பொங்கல் தீபாவளி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பால் பொங்குக பொங்குக
பழம்போல் வளம் பொங்குக
நலம் பல எய்துக
நன்மைகள் ஓங்குக – ஜோமா. 

பொம்மைகள் வைத்து விளையாடி – தேன்
பொங்கலை அதற்குப் பரிமாறி
தம்பியர் தங்கைகள் சிரிப்போடு – முத்துச்
சிந்திடும் முல்லை விரிப்போடு
கும்பிட்டுத் தினம் தினம் நலம்பாடி – நம்
குடும்பத்தில் செல்வங்கள் குன்றாக
நம்மிடம் வந்தது நற்றமிழ் பொங்கல் – அதன்
நலம் பெற்று வாழ்வீர் ! வாழ்த்திடுங்கள். !

பால் போல் சுகம்
பழம் போல் வளம்
கரும்பென இன்பங்கள்
கலந்து பெருகட்டும்
இன்பம் நிறைந்து
பொங்கட்டும் – டி மீனாக்ஷி

சிறுவரின் வாயிலே செங்கரும்பு
சிங்காரிகளின் தலையிலே செந்தாழம்பூ
முத்துச் சம்பா நெல்குத்தி
முற்றத்தில் பால் பொங்கலிட்டு
குத்துவிளக்கேற்றி வைத்து
கொண்டாடி மகிழும் பொங்கல் நாளில்
எனது இனிய வாழ்த்து – லவிங்க் சிஸ்டர் ஷாந்தி
J

மயிலின் சாயலும் அன்னத்தின்
நடையும் மங்கையர் சொத்து.
மங்கையர் கைபட்டு இனித்திடும்
பொங்கல் எத்தனை உயர்வு !!
மங்கையும் மழலையும் சேர்ந்து
பொங்கலும் உண்டிட,
அவ்வின்பம் சீரிய இன்பமன்றோ!
நினைவீர் அவர்தமை இன்று. !
-அன்புடன் இராஜேஸ்வரி.

பொங்கல் வந்தது
பூமி செழித்தது.
கழனியின் கதிர்களும்
கனியும் கரும்பும்
உண்டு மகிழ்ந்து
இன்புற்று வாழ்க !
பொங்கலின் பொலிவும்
மஞ்சளின் மணமும்
செங்கரும்பு இஞ்சி
செந்தேன் சுவையும்
மங்கல மகிழ்வும்
மனைகளில் நிலைபெற
தங்களின் வாழ்வு
தழைத்திட வாழ்த்தும்
-முத்தையா.

புரட்டாசி போனபின்னால்
புறப்பட்ட ஐப்பசியில்
சிறப்பான விழாவொன்று
சீர்மிகு தீபாவளியென்போம்
புதிய நல் ஆடைகளும் – சுவை
பொதிந்துள்ள உணவுகளும் – கண்
அதிசயிக்கும் ஒளிகாட்டி – ஞாயிறு
உதித்திருக்கும் வேளையிலே
வாழ்த்துகிறேன். வாழி ! வாழி !!.
_மெய்யப்பன். 

முருகனே செந்தில்முதல்வனே மாயோன்மருகனே
ஈசன்மகனே ஒருகைமுகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுது வணங்கியவருக்கு
வேல் பிடித்த வேலவனின் அருளாலே
பால் பொங்கிப்பரிமளிக்க பன்னலமும்
எந்நாளும் பெற்று இன்பமுடனிருக்க
எம்பெருமானை நினைத்து வாழ்த்துகிறேன். 






தைமகளே வருக.

புத்தம் புதுமகளே ! எங்கள்
பொங்கற் திருமகளே !
முத்திரைப் பொன்னொளி வீசிவரும் தமிழ்
மோகனப் பூமகளே !
செங்கரும்பு, வாழைச்சீப்பு மஞ்சள்
சீருடன் வந்தவளே !
எண்ணும் நலங்களும் என்றும் பெற
ஈந்திடுவாய் திருமகளே !. – வி. முத்து.

அட்டிலிட்ட புத்தரிசி
அச்சுவெல்லம் துணைசேர்த்து
அறுசுவை மணம் பரப்ப
கன்னலும் களிமஞ்சளும்
இஞ்சியும் மனை நிரப்ப
வஞ்சியர் குலவையிட
வந்தவளே ! தையம்மா !
குன்றாத வளமும் நலமும்
குறையாமல் பெறுக என
வாழ்த்துகிறேன். – மெய்யப்பன்.

இயற்கை அழகின் எழிலைக்
கண்டு மயங்கி
அழகின் சிரிப்பில் இயங்கி,
தமிழ் பொங்கலிட்டு
மனைவி, மக்கள், சுற்றம், கொற்றம்
சிறப்புற வாழ
இயற்கையன்னையின் தாலாட்டிலே
வாழ்த்துகின்றோம்.

தமிழர் திருநாள் வாழ்த்து.

உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்க
உவகையிலே இன்பம் பொங்க
செல்வமும் சீரும் பொங்க
சிறப்பெல்லாம் சேர்ந்து பொங்க
நல்லவன் – முருகன் அன்பு
நாளெல்லாம் நமக்காய்ப் பொங்க
இல்லத்தில் பொங்கல் பொங்க
என்பொங்கல் வாழ்த்துச் சொன்னேன்.

யானை முகத்துக் கணபதியும்
ஆறுமுகத்து வேலவனும் இறைவனுக்குப்
பூசை செய்யும் பயனாக
பானை வைத்துப் பொங்கலிடும்
பண்பார் திருநாள் இன்றைக்கு
வேணும் செல்வம் அத்தனையும்
பெற்று வாழ வாழ்த்துகிறேன் !
தைமுதல் நாளாம் பொங்கல்
தமிழர் வாழ்வில் இந்தத்
தரணியை வாழ்த்திடுவோமே !!

-பேபி மலர்விழி, சிட்லபாக்கம். 

கன்னல் சாறுவழியும்
கண்கள் ஒளிசிந்தும்
மின்னலெனச் சிரிப்பு
மறையும் – இன்னல் போனது
இனிய நாள் வந்தது
பொங்கல் ஆனது
பொங்கும் நன்னாளே

அன்புள்ள சரவணன், மாணிக்கம், சொர்ணமீனா,உமையள்,கருப்பாயி, அன்னம்.

உழவர் திருநாள்.

பூந்தமிழின் ஏடெடுத்துப் பொக்குறவே புன்னகைத்து
புத்தகமாய் ஒளிவளர்க்கும் குழந்தை !
புதுக்கரும்பின் சாறெடுத்துப் பல்லிலாத பொழுதினிலும்
பூவாகச் சிரிக்குமொரு சலங்கை !
வாழ்வு தரும் பொங்கலிது வற்றாமல் நூற்றாண்டு
வந்தருள வேண்டுவது இரு கை !
வறுமையெல்லாம் போயொழிய வளங்கள் வந்து சேர்ந்திடவே
வாழ்த்தியபின் வருகிறது கவிதை.
-ஆர். ஷாந்தி. 

பொங்கல் வாழ்த்து

உள்ளத்தில் தூய்மை பொங்குக
உடலில் வளமை பொங்குக !
தெள்ளுதமிழ் முழக்கம்
தெருவெல்லாம் பொங்குக !
தேன் மொழியார் அறச்செய்கை !
திக்கெட்டும் பரவுக ! வாழ்வு மலர்க !
வளமே பெருகுக ! தாழ்வு மறைக !
தமிழ் வாழ்க ! வாழிய இன்பம் !
வாழிய இன்பம் – அன்புத்தம்பி ச மெய்யப்பன். 

தீபாவளி வாழ்த்து

மங்களகரமான
தீபாவளித் திருநாளில்
எல்லா நலமும் வளமும்
வாய்க்கப் பெற்று
வாழ்க வளமுடன்
இயற்கை அழகின் எழிலைக்
கண்டு மயங்கி அழகின் சிரிப்பில்
இயங்கி, தமிழ் பொங்கலிட்டு
மனைவி, மக்கள், சுற்றம்,
கொற்றம், சிறப்புடன் வாழ
இயற்கையன்னையின்
தாலாட்டிலே வாழ்த்துகிறோம். 

பொங்கல் வந்தது பொங்கல் தந்தது
உங்கள் கையில் இனிப்பைத் தந்தது.
எங்கள் கையில் வாழ்த்தைத் தந்தது
உங்கள் வாழ்வு மலர்ந்திட இந்தப்
பொங்கல் நாளில் வாழ்த்துகிறேன்
.
பொங்கட்டும் பொங்கல் ! நின்று
பொழியட்டும் மகிழ்ச்சி ! நெஞ்சில்
தங்கட்டும் இனிமை ! வந்து
பொழியட்டும் ! நன்மை
பூக்கட்டும் இன்பம் ! என்றும்
பெருகட்டும் செல்வம் ! ஓங்கிச்
செழிக்கட்டும் நலன்கள் ! நன்கு
கனியட்டும் வெற்றி ! நாளும்.



சிலர் வாழ்த்துக்குள்ளேயும் மெகா கடிதாசி எழுதி வைச்சிருக்காங்க. உள்ளே ஒரு பக்கம் விடல.

சிலர் அவங்க பரிட்சையில் வாங்கின மார்க்கை எல்லாம் கூட அனுப்பி  இருக்காங்க. J

பாப்பா படங்கள் கொண்ட வாழ்த்துக்கே எனது அனைத்து ஓட்டுக்களும். அவ்ளோ பிடிக்கும் J
 

முன்பு இருந்தது போலில்லாமல் எல்லாவற்றுக்கும் எல்லாவிதமான கார்டுகளும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதாவது பொங்கல் தீபாவளிக்கு இயற்கைக் காட்சிகளும் பிறந்தநாளுக்கு சாமி படங்களும் அனுப்பிருக்காங்க. காலங்கள் மாற மாற எல்லாமே மாறி இப்போ கார்ட் எல்லாம் விக்கிறாங்களான்னு கூடத் தெரியல. கம்பெனிக்காரங்க, ஷேர் ப்ரோக்கர்ஸ், சிட்ஃபண்ட்ஸ்,  அனுப்பும் வாழ்த்துகளும் இருந்துச்சு. அவற்றை எல்லாம் இதில சேர்க்கல. J

எப்பிடின்னா என்ன வாழ்த்த மனசிருந்தா போதும் அது டிவிட்டர்னாலும், ஃபேஸ்புக்கானாலும் வாட்ஸப்பானாலும் சரி எல்லாரையும் அவங்க பிறந்தநாளிலும் ஸ்பெஷல் நாட்களிலும் மனமார வாழ்த்துவோம் வாங்க





இந்த வாழ்த்து எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். 2013 இல் எங்களை விட்டுப் பிரிஞ்ச, இந்த உலகத்தை விட்டு மறைஞ்ச, ஆனால் எங்கள் உள்ளங்களில் வாழும் எங்கள் இரண்டாவது தம்பி பாபு அனுப்பிய பொங்கல் வாழ்த்து இது. குழந்தை போன்ற மனம் கொண்ட அவன் தேர்ந்தெடுத்ததும் ஒரு குழந்தைப்படம் போட்ட வாழ்த்துப்பா. அவனையே தொட்டமாதிரி இருந்தது. ஹ்ம்ம்.

இஞ்சி மஞ்சள் செங்கரும்பு
இனிய சுவை முக்கனிகள்
நஞ்சைவிளை செந்நெல்
புஞ்சைவிளை தானியங்கள்
கொஞ்சுவளம் கொழிக்கட்டும்
குவலயமே வாழட்டும்
நெஞ்சுவந்து பொங்கலிலே
நிறை மனத்தால் வாழ்த்துகிறேன்.

தங்களன்புள்ள பாபு.

--தாங்க்ஸ்டா தம்பி.

6 கருத்துகள்:

  1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... என்னிடம் கூட எனக்குக் கிடைத்த பிறந்த நாள் வாழ்த்துகள் சில உண்டு - இப்போதும்!

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. பழைய நினைவுகளை பொக்கிசமாக வைத்திருப்பதற்கு முதலில் பாராட்டுகள், பின் வாழ்த்துகள் கடைசியில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் !! :)

    பதிலளிநீக்கு
  3. nandri Venkat sago

    nandri Baskar sago

    aam. nandri DD sago.


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. என்னிடம் பல வாழ்த்துக் கார்டுகள் இன்னும் நினைவலைகளை மீட்டிப் போகிறதுபழையன கழிதலும் புதியனபுகுதலும் என்று இதைச் சொல்லலாமா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...