எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

பொண்ணுக பெஞ்ச்.

பொண்ணுக பெஞ்ச்.

பள்ளிகளில், கல்லூரிகளில் மெக்காலே கல்வித் திட்டம் தேவையில்லை, ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை, தாய்மொழிக் கல்விதான் தேவை என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஜாலியா இருக்க விடாம படி படின்னு  வீட்டை விட்டுத் தொரத்துறாய்ங்க., நம்மள எல்லாம் பள்ளிக்கூடத்துக்கும் காலேஜுக்கும் அனுப்பிட்டாய்ங்களே என்று கஷ்டப்பட்டுப் படிப்பதுபோல் ரெண்டு புக்கைக் கையில் வைத்து பாவ்லா காட்டிக் கொண்டு நண்பர்களுடன் ஊர்சுற்றிக்கொண்டு அரட்டை அடிக்கும் பசங்க பொதுவாக அமரத் தேர்ந்தெடுப்பது வகுப்பறையின் கடைசி பெஞ்ச்தான். அதுனால அந்த பெஞ்சுக்கு மாப்பிள்ளை பெஞ்ச்னு பேரு. 

முதல் பெஞ்சில உக்காந்தா பாடம் நடத்துனவோடனே கேள்வி கேப்பாங்க. அத கவனிச்சாதானே பதில் சொல்ல முடியும். அதுபோக வீட்ல வேற படிச்சிருக்கணும். இப்பிடிப் படிச்சிருந்தாதானே சந்தேகம் வரும். 

அவங்க சந்தேகம் எல்லாம் பெல் அடிச்சவோடனே வாத்யார் கிளம்பிடுவாரா . இந்த அவர கட் அடிச்சிட்டு எந்த தியேட்டர்ல சினிமா பார்க்கலாம். ஃப்ரெண்ட் சைட் அடிக்கிற ஆளுக்கு லெட்டர் கொடுக்குற சர்வீஸ் வேற பண்ணனும். 

இதுமாதிரி பையன்கள் மட்டுமில்ல சில பொண்ணுகங்களும் எங்களோட படிச்சாங்க. மிடில் ஸ்கூல்ல சசிகலான்னு ஒரு பொண்ணு கடைசி பெஞ்ச்லதான் உக்காந்திருப்பா. எட்டாங்கிளாஸுக்கு பதினெட்டு வயசுப் பொண்ணு தோற்றம். ரெட்டை சடை போட்டு பாவாடை தாவணில வந்தா தமிழ் சினிமா ஹீரோயின் தோத்தா. பசங்களோட தேவதை.  

பாடத்தையே கவனிக்கமாட்டா. பின் பக்கத்துல உக்காந்து நம்ம ரெண்டு சடையையும் கோர்த்துபின் பண்ணி விடுறது. பேப்பர்ல ஏரோப்ளேன் பண்ணி எங்கேயோ விடுறது. நோட்ஸ் கொடுத்தா எழுதுறது இல்ல. எழுதுறமாதிரி பாவ்லா செய்றது. வாத்யார் கேள்வி கேட்டு நிக்க வைச்சா ஸ்டைலா எழுந்து நிக்கிறது. கடோசில எட்டாங்கிளாஸ்ல பெயில்தான். ஆனா கல்யாணம் ஆயிட்டுது. இப்ப அவ பசங்க நல்லா படிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ப்ளஸ்டூ படிக்கும்போது தமிழய்யா அறம்வாழி மாஸ்டர் ப்ரீயட் மதியம். சாப்பாட்டு டைம்ல யாரோ ஒரு ஃப்ரெண்டு கனகாம்பரம் கொண்டு வர ஒருத்திகிட்ட கொடுத்து கட்டித்தாடின்னு சொன்னோம். அவ கட்ட ஆரம்பிச்சுப் பாதி கூட முடில., பெல் அடிச்சிருச்சு. சார் வந்துட்டார். மடியில் பாவாடைமேல போட்டுக் கட்டத் துவங்கினவ அப்பிடியே நூலையும் பூவையும் மடக்கிப் பிடிச்சபடி எல்லாரோடயும் எழுந்து மதிய வணக்கம் ஐயான்னு சொல்லிட்டு உக்காந்தா.

சார் பாக்க மாட்டாருன்னு நினைச்சு பூவைத் தொடர்ந்து தொடுத்திட்டு இருக்கா. அது பெஞ்ச் டேபிள் டைப்புங்குறதால இடுவல்ல அவ பூக்கட்டுறத மாஸ்டர் பார்த்துட்டார். அவருக்குக் கொஞ்சம் மாறுகண். சரி நம்மள எங்க பாக்கப் போறாருன்னு தொடர்ந்து தொடுக்கவும். என்னம்மா பூக்கட்டுறீங்க வகுப்பை கவனிங்க என்று அவர் சொல்லவும். தொடர்ந்து மடியில் இருந்த பூவை எடுத்து டேபிள்ல இருந்த ஷெல்ஃப்ல போட்டுட்டு தொடர்ந்துகட்டுனா. 

மாஸ்டர் என்னமா சிறுவாடு மாதிரி அள்ளித் திரும்பக் கட்டுறீங்களேன்னு சலிக்கவும் பயந்து பூவை டேபிளுக்குள்ள தள்ளிட்டு முன்ன வந்து உக்காந்து வகுப்பை கவனிச்சா. எங்களுக்கெல்லாம் திக்குன்னு ஆயிடுச்சு. ஆனா அவ ஒண்ணும் நடக்காதமாதிரியே இருந்தா J

என்னதான் கிறிஸ்டீன் மிஷனரீஸ்ல படிச்சாலும் அப்போ கூட சில பொண்ணுங்க கட் அடிச்சிட்டு ஒருதலை ராகம் எல்லாம் பார்க்கப் போயிருக்காங்க. வந்து பிழியப் பிழிய அழுது கதை சொன்னதெல்லாம் தனி. தாலியா சலங்கையான்னு ஒருபடத்தைப் பார்த்துட்டு வந்து ஒருத்தி திரைக்கதை வசனத்தோட சினிமாவாவே நடிச்சுக் காட்டியும் இருக்கா. 

காலேஜ்ல படிக்கும்போது கடைசி பெஞ்ச்ல உக்காராட்டியும் ஒரு நாள் இங்கிலீஷ் மிஸ் ரோஸாலி ஏதோ கேக்கும்போது  பத்மான்னு ஒரு பொண்ணு பக்கத்திலிருந்த ஃப்ரெண்ட் கூட ஏதோ அரட்டை அடிச்சிட்டு இருந்தா. மிஸ் உடனே கோபமாயிட்டு திட்டிட்டாங்க. ”எதுக்கு வர்றீங்க படிக்கவா இல்லை அரட்டை அடிக்கவா”ன்னு.

”மிஸ் எங்க வீட்ல கல்யாணம் செய்யச் சொல்லித்தான் சொல்றேன். ஆனா செய்ய மாட்டேங்கிறாங்க. ஒரு டிகிரி வாங்கினாத்தான் மேரேஜாம். அதுக்காகத்தான் படிக்க வரேன்”னு அதிரடியா அடிச்சு விட்டா. எங்களுக்கெல்லாம் அஸ்தில ஜுரம் கண்டு போச்சு.

உடனே மிஸ் சிரிச்சிட்டு உக்கார சொன்னாங்க. இப்ப நினைச்சுப் பார்த்தா. பொண்ணுக பெஞ்ச் கொஞ்சம் சுதந்திரமான பெஞ்ச் போலத்தான் தோணுது. கடைசி பெஞ்சானா என்ன மொத பெஞ்சானா என்ன 

மொத பெஞ்ச்னா ஞாலெட்ஜ் கெயினிங்க் இருக்கும்னு நினைப்பு. நாங்கதான் ஃபர்ஸ்ட் க்ரேடுன்னு. எல்லாத்துக்கும் கூவுறது. தலையக் குடுக்குறது. அப்புறம் சிரமப்பட்டு செய்றது. வகுப்புலன்னு இல்ல. எல்லா இடத்துலயும்தான்.  

((படிக்கிறது வேலைக்குப் போகத்தான்னு டிடர்மினேஷனோட இருந்தவங்க எல்லாம் இன்னிக்கு ஓரளவு சுதந்திரமா இருக்காங்க. இப்ப படிச்சிட்டு வர்ற பொண்ணுங்க தன்னோட வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கிறாங்க. சிலசமயம் அவங்களோட அதீத தன்னம்பிக்கை தலைக்கனமாவும் மாறிடுது.))

டியூஷன் போகணும், வராத சப்ஜெக்டை சப்ஜாடா அலசிக் காயப்போடணும்னு கன்னா பின்னான்னு படிச்சதெல்லாம் குழம்பு வைக்கும்போது கான்செண்ட்ரேட்டா இருக்கு கொஞ்சம் வாட்டரை ஆட் பண்ணு. ரொம்ப கொதிக்க வைச்சா எவாபரேட் ஆகி கம்பஸ்ஷன் ஆயிரும். அப்புறம் கோல்தான் சட்டியை சுரண்ட நைட்ரிக் ஆசிட் போட்டுக் கழுவணும்னு வாழ்க்கைல வந்துச்சோ இல்லையோ கண்ணுக்குள்ள பூரா ஒரே கெமிஸ்ட்ரிதான். 

வாராவாரம் வெள்ளிக்கிழமைகள்ல கூட அசோஷியேஷன் அவர்ஸ்ல லேப்லேருந்து ஆசிட் பட்டு ஆயிரங்கண்ணா ஓட்டை விழுந்த ஏப்ரனைச் சுருட்டிக்கிட்டு டெஸ்டை எல்லாம் ரஃபா முடிச்சிட்டு ஓடி வந்து இலக்கியக் கூட்டங்கள்ல ஆர்வமாக் கலந்துக்கிட்டதுண்டு. எதையும் செய்யப்போறதில்லைன்னா சோஷியாலஜி, ஹிஸ்டரி, லிட்டரேச்சர் எடுத்துட்டு படிச்சமோ இல்லையோன்னு இலக்கியம் வளர்த்திருக்கலாம். J


இவ்ளோ பேசுறமே ஒரு வேலைக்கும் போகாம வீட்ல சோறாக்கிட்டுத்தானே இருக்கோம். ’நம்மளயும் படிச்சபின்னாடி கல்யாணம் செய்யணும் . ஒரு டிகிரி வேணும். அதுக்கு 21 வயசு ஆகணும். அது வரைக்கும் வீட்ல நச்சுபிச்சு பண்ணாம படிக்கட்டும்’னுதானே படிக்க வைச்சிருக்காங்கங்கிற உண்மை மண்டைல ஒறைக்குது. 

ஒழுங்கா படிக்கணும். போட்டி போட்டு நல்ல மார்க் எடுக்கணும். ஃபர்ஸ்ட் வர ட்ரை பண்ணணும். காலேஜ் போனமா வீட்டுக்கு வந்தமான்னு இருக்கணும்.  இப்பிடி எல்லாம் கட்டம்போட்டு வட்டம் போட்டு சட்டம் போட்டே வாழ்ந்திட்டோமே.  

என்ன படிச்சும் என்ன பண்ணுனோம்னு நினைச்சா எனக்குக் கடைசி பெஞ்ச் பொண்ணாக்கூட ஆட்டம்போட்டிருக்கலாமேன்னு ஏக்கமா இருக்கு.

6 கருத்துகள்:

  1. சரிதான் நீங்க சொல்வது...

    பதிலளிநீக்கு
  2. முதல் பெஞ்சா இருந்தாலும் கடைசி பெஞ்சாயிருந்தாலும் ஆசிரியர் நடத்தும் விதம் மண்டையில் ஏறிடும் .ஆசிட்ல் குளிச்சோம் என்ன உங்களை மாதிரி எழுத வரலை .முன்னரே எழுத ஆரம்பித்து இருந்தால் கை கூடி இருக்கலாம் .

    பதிலளிநீக்கு
  3. முதல் பெஞ்சா இருந்தாலும் கடைசி பெஞ்சாயிருந்தாலும் ஆசிரியர் நடத்தும் விதம் மண்டையில் ஏறிடும் .ஆசிட்ல் குளிச்சோம் என்ன உங்களை மாதிரி எழுத வரலை .முன்னரே எழுத ஆரம்பித்து இருந்தால் கை கூடி இருக்கலாம் .

    பதிலளிநீக்கு
  4. முதல் பெஞ்சா இருந்தாலும் கடைசி பெஞ்சாயிருந்தாலும் ஆசிரியர் நடத்தும் விதம் மண்டையில் ஏறிடும் .ஆசிட்ல் குளிச்சோம் என்ன உங்களை மாதிரி எழுத வரலை .முன்னரே எழுத ஆரம்பித்து இருந்தால் கை கூடி இருக்கலாம் .

    பதிலளிநீக்கு
  5. nandri Seeni :)

    nandri Palanisamy sir :)

    nandri Venkat sago :)


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...