எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 செப்டம்பர், 2014

சாட்டர்டே ஜாலிகார்னர். பரிவை சே குமாரின் பத்ரிக்கைப் பயணம்.




வலைத்தளம் மூலம் அறிமுகமான என் அருமைத் தம்பிகளில் ஒருவர் சகோதரர் குமார். நாட்கள் எவ்வளவு ஆனாலும் என் இடுகைகளை வந்ததும் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர் சகோ குமார். இவரின் வலைத்தளத்தில் முன்பு கவிதைகளும், பின் கதைகளும் இப்போது கிராமத்து நினைவுகளும் படித்து மகிழ்வது உண்டு. தொடர்ந்து வலைத்தள சகோதரர்களின் ஊக்குவிப்பால் நாம் எழுதிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.அந்த வகையில் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய என்னுடைய உயர்வில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது குமார்.

எனக்கு மிகப் பிடித்தது பரிவை சே குமாரின் கதைகள். முகநூலிலும் பல்வேறு இடங்களில் இவரின் கவிதைகளும் கதைகளும் பகிரப்பட்டிருக்கும். நிறைய பேர் குமாரின் கதைகளைப் பகிர்ந்து படித்திருக்கிறேன்.  மிக அருமையான சரளமான மொழிக்குச் சொந்தக்காரர் குமார். தனக்கென பத்ரிக்கையிலும் வலையுலகிலும் தனி இடம் பிடித்திருக்கும் குமாரிடம் அவருக்கும் பத்ரிக்கைகளுக்கும் உள்ள பந்தம் பற்றி ஒரு கேள்வி. 

///பரிவை சே குமார் என்ற பெயரில் உங்கள் சிறுகதைகளும் கவிதைகளும் அநேக பத்ரிக்கைகளில் வந்துள்ளன. நீங்கள் எழுதுவதில் உங்களுக்குப் பிடித்தமானது எது. எது எதுல வெளிவந்துருக்குங்குற   முழு விவரமும் கொடுங்க..///

அன்பின் அக்கா...

வணக்கம்...

நலம் நலமே ஆகுக.

தாங்கள் கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் ஊருக்கு வந்திருந்த காரணத்தால் கேட்ட நேரத்தில் அனுப்ப முடியாமல் போனதற்கு முதலில் மன்னியுங்கள்.

உங்கள் கேள்விக்கான பதிலை என் எழுத்தில் சொல்கிறேன்.

நான் எழுத ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் போதுதான்... அதுவும் எனது பேராசான் மு.பழனி அவர்களும் எனது நண்பன் முருகனும் (பாருங்க எங்க எல்லாருடைய பேரும் தமிழ்கடவுள் பேராய் அமைந்திருப்பதை) கொடுத்த தூண்டுதலே காரணம்.

முதலில் எழுத ஆரம்பித்தது கதைதான்... எப்படியிருந்ததோ படித்த ஐயா அருமை என்று சொல்லி வைத்தார்... நான் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கவிதைகளில் மனம் பாய, 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே' அப்படின்னு ஒரு கவிதை அம்மா ஜெ... யோட கட்-அவுட் கலாச்சாரத்தை வைத்து எழுதினேன். அது ஐயாவை ரொம்பக் கவர, அவரது முயற்சியில் திரு.பொன்னீலன் ஐயா அவர்களால் தாமரையில் பிரசுரிக்கப்பட்டது. இதுதான் முதல் பத்திரிக்கைப் பயணம்.



பின்னர் கதைகளை எழுதி தினபூமி-கதைபூமி, வாசுகி, சுபமங்களா, உதயம் என வர ஆரம்பித்தது. கவிதைகளும் மாலைமலர், பாக்யா, உதயம், தினபூமி என வலம் வந்தன. வீட்டில் இருக்கும் போது கதை எழுதலாம் என்று அமர்ந்தால் 'வயல்ல வேல கெடக்கு... தம்பி இப்பத்தான் கத எழுதுதாம் கத...' என்று கத்தியபடி வயலுக்குச் செல்வார் அப்பா. பின்னர் கதை வந்தால் படித்து 'பயபுள்ள நல்லாத்தான் எழுதியிருக்கான்...' என்று சந்தோஷிப்பார்.

கல்லூரியில் நண்பர்களுக்கு காதல் கவிதைகள் எழுதிக் கொடுக்கும் ஒரு எழுத்தாளனாக வைத்திருந்தார்கள். சந்தடி சாக்கில் கடைசியில் நம்ம பேரைப் போட்டுக் கொடுத்து அடுத்த நாள் அவர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன்...

இடையில் சிலகாலம் எழுத்தைத் தொடரவில்லை... பின்னர் மீண்டும் எழுதும் ஆர்வம்... திருமணம், சென்னை வாசம், பத்திரிக்கைப் பணி என காலம் ஓடிய போது மீண்டும் எழுத்துக்கு தடா. இடையில் எப்பவாவது எழுதி தினமணிக் கதிர், தினத்தந்தி குடும்ப மலரில் எழுதினேன்.

அபுதாபி வந்ததும் எனது கஷ்டங்களைக் களைய நிறைய எழுத ஆரம்பித்தேன். எனது எண்ணங்களைப் பதியும் முகமாக மனசு (கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர்) என்ற வலைப்பூ ஆரம்பித்தேன். உங்களைப் போன்ற எத்தனையோ உறவுகள் கிடைத்தார்கள். எனது சுக துக்கத்தில் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எழுத்து...

'பரிவை' சே,குமார்ன்னு ஊர்ப்பேரோட வலைப்பூவில போட்டா இப்போ எல்லாருக்கும் மனசு சே.குமாராயிட்டேன். குடந்தை ஆர்.வி. எஸ் அண்ணன் கூட தன்னோட இளமை எழுதும் கவிதை நீ நாவல்ல அடியேனைப் பற்றியும் மனசு சே.குமார்ன்னு போட்டு சொல்லியிருக்கார். முகம் பார்க்காத உறவுகளுக்கு எல்லாம் மனசில் குமாரா இருப்பது சந்தோஷம். இந்த எழுத்து என்னோடு கடைசிவரை வரவேண்டும் என்பதே ஆசை.

முன்பு எழுதிய கதைகளை விட தற்போது எழுதும் கதைகளில் வாழ்க்கை ஓட்டத்தைப் படம் பிடிக்க ஆரம்பித்தபோது எழுத்தில் முதிர்ச்சி வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. இப்போது கவிதைகள், கட்டுரைகள் எழுதினாலும் கதை எழுதுவதில்தான் அதிக ஆர்வம் இருக்கிறது. நான் எழுதும் கிராமத்து நினைவுகள் அதிகமான நட்புக்களைக் கவர்ந்திருக்கிறது.... என்னையும் சேர்த்துத்தான்...

எனது கதைகள் நம் வட்டார வழக்கில் நம் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை... அப்படிப்பட்ட கதைகளைத்தான் இப்போது எழுதுகிறேன். வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கிடைத்த முதல் பரிசே எனது கதைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு... (ஆனால் மாதங்கள் நான்காகியும் இன்னும் பரிசுப் பணம் வரவில்லையக்கா...)

அன்பான மனைவி நித்யா... அழகான அறிவான... ஸ்ருதி, விஷால் என வாழ்க்கை சிறப்பாய்... என்ன ஒண்ணு அருகில் வைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை ஏக்கமாய்... படித்த படிப்பு சோறு போடுது... கணிப்பொறியோட அல்லாடுறேன்... கதைகளை புத்தமாக்கும் எண்ணம் நாட்களை விழுங்கி நாடகமாடுகிறது. நல்ல கதையுடன் திரையுலகம் செல்ல எண்ணம்... அயல் நாட்டு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் முட்டுக் கட்டையாய்...

என்னையும் தங்கள் சாட்டர்டே ஜாலிக்கார்னருக்காக தொடர்பு கொண்டமைக்கு நன்றி அக்கா...

என்றும் பாசங்களுடன்....

-'பரிவை' சே.குமார்.

டிஸ்கி :- லேட்டானாலும் லேட்டஸ்டா சொல்லிட்டீங்க. சீக்கிரம் குடும்பத்தோடு இணைய வாழ்த்துகள். யே யப்பா எவ்ளோ பத்ரிக்கைல எழுதி இருக்கீங்க குமார். போததற்கு பத்ரிக்கைப் பணியும் பார்த்திருக்கீங்க. அதான் உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சியும் தெளிவும் இருக்கு. பயிற்சிப் பட்டறை அப்பிடி. :) உங்க சிறுகதைகள் புத்தகமா வரணும். மிக அருமையான கதைகள் உங்களுடையவை. வந்ததும் வாங்க காத்திருக்கோம். சீக்கிரம் போடுங்க. மனசு நினைத்தால் நேரம் அமைந்துவிடும். இந்தப் புத்தகக் கண்காட்சியில் உங்கள் சிறுகதைத் தொகுப்பும் வெளிவர அக்காவின் மனமார்ந்த வாழ்த்துகள். :) மேலும் சினிமாத்துறையிலும் ஜொலிக்க அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள். :)

9 கருத்துகள்:

  1. தொடர்ந்து படிக்கும் வலைப்பூக்களில் ஒன்றான ”மனசு” குமார் அவர்களைப் பற்றி இங்கே படித்ததில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  2. அக்கா...
    வணக்கம்...
    சாட்டர்டே ஜாலிக் கார்னரில் எனக்கும் இடமளித்தமைக்கு நன்றி.
    நேற்றுக் காலையே பின்னூட்டம் இட்டிருந்தேன்...
    என்ன ஆனதென்று தெரியவில்லை... மாயமாகிவிட்டது போலும்...

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பகிர்வு
    இனிதே தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு.நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. நன்றி குமார். இன்றுதான் வந்தது.

    நன்றி யாழ்பாவண்ணன்

    நன்றி ஆசியா

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...