எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 பிப்ரவரி, 2018

கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே. தினமலர் சிறுவமலர். 7.

கேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே.

முப்பத்து முக்கோடி  தேவர்களும் முனிவர்களும் ஓருருவில் அடக்கம். அந்த உருவை வணங்கினாலே மும்மூர்த்திகளையும் தேவாதி தேவர்களையும் வணங்கியதாக அர்த்தம்.

ஆம் இப்படிப்பட்ட உருவம் கொண்டவள் யார்.? அனைவரும் வணங்கும் அவளின் சிறப்பென்ன ?

அன்னையைப் போன்ற முகமும் மனதும், பசுவைப் போன்ற உருவமும் அத்தோடு பறக்க இறக்கைகளும், அழகான மயில் தோகையும், இத்தனையும் ஒரே உடலிலா. ஆம் ஒரே இத்தனையையும் ஒரே உடலில் கொண்டவள்தான் அவள். ஆனால் கேட்டது அனைத்தையும் கொடுப்பாள். அதுவும் நன்மனம் கொண்ட தவசீலர்க்கே கொடுப்பாள். தெய்வீக விருந்து படைப்பாள்.

வள் யார் ? எப்படித் தோன்றினாள் ? தெரிந்துகொள்ள நாம் பாற்கடலைக் கடையும்போது போகவேண்டும். கிட்டத்தட்டப் பதினெட்டாயிரத்து ஐநூறு நாட்கள். திருப்பாற்கடலைக் கடைந்தார்கள் கடைந்தார்கள் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாக. மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.

திருமண வாழ்த்துப்பாக்கள்.

திருமணங்களில் வாசித்து அளிக்கப்படும் வாழ்த்துப் பாக்கள் பின்னாளில் மிக சுவாரசியமான நினைவுப் பதிவாக அமைந்திருக்கும். அப்படி சில வாழ்த்துப் பாக்களை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

பெண்மை போற்றுதும் தொகுப்பில் எனது கட்டுரை.

நமது மண்வாசம் வெளியிட்டுள்ள நூல் ”பெண்மை போற்றுதும்”. இது பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடு. இதன் தொகுப்பாசிரியர்கள் பிரபல பத்ரிக்கையாளர். திரு. ப. திருமலை & திரு. இரா. சிவக்குமார். இந்நூலின் விலை ரூ. 50/-

மருத்துவம், சட்டம், தொழில், சுற்றுச்சூழல்,அதிகாரமளித்தல், ஆளுமை ஆகிய பல்வேறு தலைப்புகளில் உள்ள 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் ஒரு கட்டுரையாக எனது “பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும் “ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தினமணி சிவசங்கரி விருது விழா.

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு (எனக்கு  ஆறுதல் பரிசு பெற்றமைக்காக) சென்னை மியூசிக் அகாடமியில் நீதிபதி திரு. வெ ராமசுப்ரமண்யன் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.

நமது கவிதைத் தோழி கோதை -- ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஜோதி லெக்ஷ்மி  - இந்நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கினார்.

இயற்கையும் செயற்கையும்.

இயற்கைக் காட்சிகளும் செயற்கைக் காட்சிகளும் எப்போதோ சேகரம் செய்ததிலிருந்து ..

நான் வரைந்த ஓவியப் பறவைகள். :)

திங்கள், 19 பிப்ரவரி, 2018

ஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.

அப்பனுக்கே அம்மையானவள்.

யார் இந்தப் பெண்.?. பேயுரு எடுத்தாற்போல் தலைகீழாய் கைகளால் கைலாயத்தில் ஏறி வருகிறாளே. பார்க்கவே பீதியூட்டும் நரம்பும் தோலும் எலும்புமான இப்பெண்ணைப் பார்த்துப் பரிவோடும் பாசத்தோடும் முக்காலமும் உணர்ந்த சிவ பெருமான் “அம்மையே வருக “ என்றழைக்கிறாரே. 

ஆதி அந்தம் அற்ற சிவனுக்கும் தாயான இவள் யார். ? சிவபூதகணம் போல் இவள் இப்படி ஆனது எப்படி ?

ஒரு மாங்கனி அவளை இப்படி ஞானப்பெணாக்கியது என்று நம்ப முடியுமா .. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காரைவனம் என்னும் மாநகருக்குச் செல்லவேண்டும்.

காரைமாநகரில் தனதத்தன் தர்மவதி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிவபூசனையில் ஈடுபாடு உள்ள குடும்பம் என்பதால் புனிதவதியும் சிவபக்தையாகவே வளர்ந்தார். உரிய பருவத்தில் அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்கள் புனிதவதியின் பெற்றோர்.

தனியே ஒரு இல்லத்தில் புதுமணத் தம்பதிகள் வசித்து வந்தபோது பரமதத்தன் இரு மாங்கனிகளை வாங்கித் தனது இல்லத்துக்குக் கொடுத்தனுப்பினார். அவற்றை வாங்கி வைத்த புனிதவதி சமையலில் ஈடுபட்டார்.

சனி, 17 பிப்ரவரி, 2018

காரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.

காரைக்குடி புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அய்க்கண், லயன் வெங்கடாசலம் ஆகியோரின் முன்னெடுப்பில் வருடாவருடம் இத்திருவிழா களைகட்டிவிடுகிறது. இன்னும் சில இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதோடு புத்தகம் வெளியிட கிரியா ஊக்கியாகவும் அமைகிறது.

அரிமழம் வைத்திய சாலையின் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் காந்திய காலத்துக்கொரு பாலம் என்ற நூலில் ஆசிரியர். அவர் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களின் போது தன்னார்வலராக புத்தக ஸ்டால்களை நிறுவி இலக்கிய புத்தகங்களை வெகுஜன வாசிப்புக்குக் கொண்டு செல்வது வருடா வருடம் காணும் காட்சி. இந்த வருடம் மரப்பாச்சி என்ற அவருடைய ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன்.

காந்திய நூல்கள் அதிகம்,நவீன இலக்கிய நூல்களின் புது வெளியீடுகளும் அதிகம் உள்ளன. இன்பாவின் வையாசி படித்தீர்களா எனக் கேட்டார். ( பாதி படித்திருக்கிறேன். மீதி படிக்கவேண்டும் என்றேன் . :)

பல்லாண்டுகளுக்கு முன்பே வலைப்பதிவு மூலம் அவர் அறிமுகமாகி இருந்தாலும் ( 2009 ) இன்றுதான் நேரில் சந்தித்தேன். அவரது ஸ்டாலில் எனது புத்தகங்களைக் கொடுத்து விட்டு எனது வாசிப்புக்காக ஹாருகி முரகாமியின் கினோ, மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், மிரோஸ்லாவ் ஹோலுபின் கவிதைகள், காஃப்காவின் உருமாற்றம், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ஆகியன வாங்கி வந்தேன். 
எனது அன்னபட்சியை அங்கே வந்தவுடன் எடுத்து உடனே வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகப் பிரியையை அவர் அனுமதியோடு படம் எடுத்தேன் :)

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கண்ணுக்குக் கண் கொடுக்கும் அன்பு. தினமலர் சிறுவர்மலர். - 5.

கண்ணுக்குக்  கண் கொடுக்கும் அன்பு.  


வேடனாய் இருந்தாலென்ன விருத்தனாய் இருந்தாலென்ன. பக்தியால் அவனும் நாயன்மாரில் ஒருவராக ஆகமுடியும் என்பதைக் கூறுவது திண்ணனின் கதை.

அது யார் திண்ணன். ? அவன் உடுப்பூர் என்னும் ஊரிலிருந்த நாகனார் என்ற வேட்டுவரின் மகன். சிவனடியார்களைப்போல சிவனை அகமும் புறமும் தொழுது ஐந்தே நாட்களில் சிவனிடம் ஐக்கியமானவன். அவன் தன் அன்பின் முன் பரம்பொருளையும் மெய்மறக்கச் செய்தவன். பக்தியாலும் பாசத்தாலும் தன் கண்ணையே அகழ்ந்து தந்தவன்.

பிறப்பு சாதி இனம் இவை யாவும் கடவுளுக்கு முன் சமம். அன்பும் ப்ரேமையும் பக்தியுமே அவரை அடையும் யுக்தி என்பதைச் சொல்ல வருகிறது இக்கதை.

காளகஸ்தி என்னும் ஊரில் மலைமேல் ஒரு சிவன் கோவிலிருந்தது. அந்த இறைவன் பெயர் குடுமித்தேவர். சிவகோசாரியார் என்பார் தினம் வந்து ஆகம முறைப்படி திருமஞ்சனம் செய்வித்து, வில்வம் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து, திருவமுது படைத்துச் செல்வார்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன். தினமலர் சிறுவர்மலர் - 4.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்.



த்யயுகம் இது. இந்த யுகத்திலும் அசுரர்களும் அவர்களால் தொல்லைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒரு அசுரக் குழந்தை என்னை அழைக்கிறது. அசுர நாவில் தெய்வத் திருநாமம்.

”எங்கும் நிறைந்திருக்கும் இறைவா இங்கே காட்சி கொடு” என்கிறது மழலைக் குரல். நானும் அசுரனும் தேவனுமாய், மனிதனும் மிருகமுமாய்க் கிளர்ந்தெழுகிறேன். மெல்ல மெல்ல எனக்குச் சிங்கமுகமும் பதினாறு கரங்களும் முளைக்கின்றன. பிடரி மயிர்கள் சிலிர்த்தெழுகின்றன.,,எல்லாம் ஒரு நொடிக்குள். இந்த அவதாரத்தை நான் தீர்மானிக்கவேயில்லை. கடவுள் பாதி மிருகம் பாதியாய் அது அவனால் நிகழ்ந்துவிட்டது.   

“நாராயணா நாராயணா” என்ற பிஞ்சுக்குரல் என் மனமெங்கும் மோதி என்னைக் கட்டி இழுக்கிறது. வெல்லப்பாகாய் என்னை உருகச் செய்கிறது. யாரோ ஒரு அரக்கன் கோட்டை கொத்தளங்களை உடைக்கிறான்.

“இங்கே இருக்கிறானா.. உன் இறைவன்,?. இங்கே இருக்கிறானா உன் இறைவன்..?” என்று அச்சிறுவனிடம் கேட்டபடி கோட்டையை தன் முரட்டுக் கதாயுதத்தால் உடைத்துச் சிதறடிக்கிறான் அந்த அசுரன்.

“ஆமாம் தந்தையே அவன் தூணிலும் இருப்பான் , அந்தத் துரும்பிலும் இருப்பான் ” என்கிறான்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கடவுள் நாமம் காப்பாற்றும். தினமலர் சிறுவர்மலர் - 3.

கடவுள் நாமம் காப்பாற்றும்.

ன்னது மகேந்திர பல்லவர் சிவபக்தராகிவிட்டாரா. சைவத்தைத் தழுவிவிட்டாரா. சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறாரா.சமணரான அவர் எப்படி சைவரானார், இது எங்ஙனம் நிகழ்ந்தது. இதன் சூத்திரதாரி யார் ?  இதுதான் பல்லவ தேசம் முழுவதும் பேச்சாயிருந்தது.

”அவர் சிவன்கோயிலில் ஒரு சாதாரண உழவாரத் தொண்டராம். அப்பர் என்று பெயராம். இறைவனின் திருத்தாண்டகத்தை விருத்தமாகப் பாடியமையால்  திருத்தாண்டகவேந்தர் என்று புகழப்பட்டவராம். “

”சமணனான நம் அரசனை மாற்ற அவர் அப்படி என்ன செய்தார்..?”

“இறைவன் பெயரை உச்சரித்தார் அவ்வளவே. அரசன் உண்டாக்கிய எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்தார். அதைக் கண்டு அதிவியப்புக் கொண்ட பல்லவன் அவர் கூறிய சிவநாமத்தின் மகிமையால் சைவனானான் “ 

“நஞ்சுண்ட ஈசனை வணங்கியதால் அரசன் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா. “

”அப்படி என்ன இன்னல்கள் கொடுத்தான் அரசன். ?”

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பாதகமில்லை. உடலுக்கும் உபத்திரவமில்லை.

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம்.

வெந்தும் வேகாம அள்ளிப்போட்டுக்கிட்டு வேலைக்கு ஓடுறவங்களே கொஞ்சம் நின்னு நிதானிச்சுக் கவனிங்க. உங்க உணவுல இருக்குற ஊட்டச்சத்துதான் உங்க உடம்புக்கு சக்தி கொடுக்குது. கொழுப்பு, ப்ரோட்டீன், விட்டமின் மினரல்ஸ் நார்ச்சத்து ஆகியவை அடங்கிய சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரம் இருக்கா. தினப்படி அட்டவணை போட்டு அத காலரீஸ் மூலம் கணக்கிட்டு உண்ண முடியுமா.

சனி, 10 பிப்ரவரி, 2018

வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மன்.


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஜனவரி 3.


பாஞ்சாலங்குறிச்சி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது விடுதலைப் போரும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரும்தான். 1760இல் இருந்து 1799 வரை - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் கப்பம் கட்ட மறுத்து அந்நியருக்குத் தலைவணங்காத வீரத்தால் நம் மனங்களில் முத்திரை பதித்துச் சென்றவர் அவர். 1857இல் சிப்பாய்க்கலகம் ஏற்படுவதற்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னே ஆங்கில அரசை எதிர்த்த பாளையக்காரர்களுள் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2018 ஜனவரி கோகுலம் இதழில் வெளியானது. 
Related Posts Plugin for WordPress, Blogger...