எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்



”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

1.உங்கள் இளம் வயது அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்?

ப:- இளம்வயதில் வாழ்த்துப்பாக்கள் எழுதுவதைக் கவிதை என எண்ணி இருக்கிறேன். கல்லூரிக்கு வந்தபின் கவியரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அடுக்குமொழிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

2. எப்போதும் விருப்பமாக படிக்கும் நூல்கள் எவை? என்ன காரணம்?

கவிதைகளில் ( முன்பு படித்தது ) ந. பிச்சமூர்த்தி, நீல பத்மனாபன், ஆத்மாநாம், ஆழியாள், அனார் , தாமரை, அப்துல் ரஹ்மான், வண்ணதாசன், ஈழவாணி, ரிஷான் ஷெரீஃப், நேசமித்திரன், நதனிகா ராய் கவிதைகள். ஔவை, ஆண்டாள் ஆகியோரையும் பிடிக்கும். புனைவுகளில் பஷீர், மீரான், கல்கி, ப. சிங்காரம், சுசீலா தேஷ்பாண்டே, எம் ஏ சுசீலா, திலகவதி, ஸ்டெல்லா புரூஸ் பிடிக்கும்.

3.கவிதை எழுதத் தூண்டிய அனுபவம் எது?

முதன் முதலில் கவிதை எழுதத் தூண்டியது வாசிப்பனுபவம்தான். கல்லூரிக்கு வந்தபின் கவிதை நூல்கள் வாசித்ததும் எழுதத் தோன்றியது. பதின்பருவக் கிளர்ச்சி எழுதுவதை எல்லாம் கவிதை என எண்ணத் தூண்டியது.

4. எழுதுவதில் திருப்தி இருக்கிறதா?

நிச்சயமாக. எழுத்து என்னைப் புதுப்பிக்கிறது. எழுதும் கணம் தோறும் நான் புதிதாய்ப் பிறக்கிறேன்.

5.யாருடைய எழுத்துகள் பிடிக்கும்?ஏன்?

பஷீரின் எழுத்துக்கள்தான். பரந்து விரிந்த அனுபவமும் ஹாஸ்யமும் ஒருங்கே கொண்டவை. வண்ணதாசனின் கவிதைகளும்.

6. வாழ்க்கை அனுபவம் எழுத்தை உருவாக்குகிறதா?எப்படி?

வாழ்க்கை அனுபவம்தான் அநேகமாக எழுத்தாகிறது. சில சமயம் பிறர் எதிர்கொள்ளும் அனுபவங்களும் நம்முள் புகுந்து எழுத்தாகின்றன. திருமணத்துக்கு முன் காதலைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். திருமணமான பின் பல்லாண்டுகள் கழித்து என் வாழ்வியல் அனுபவங்களைக் கவிதையாக்கினேன்.

/// ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

சாம்பலாகி விட்டோமென்று நினைத்தேன்,
உயிர்த்தெழுந்த போது தெரிந்தது நான்
ஒரு பீனிக்ஸ் பறவையென்று....!!!

புலங்கள் பெயரும் பறவை என இருந்தேன்....
கண்டம் விட்டுக் கண்டம் சென்று
கணங்கள் தோறும் அனுபவங்கள் சேகரித்தேன்....!!!!

விழித்துக் கொண்ட போது தெரிந்தது,
நான் வாழ நினைத்ததை விட
அற்புதமாய் வாழ்ந்து இருக்கிறேனென்று....!!!!!///


7. உங்கள் கவிதைகளில் யாருடைய தாக்கம் இருக்கிறது?

பொதுவாக என்னுடைய கவிதைகள் படிமக் கவிதைகள். மு மேத்தா, அப்துல் ரஹ்மான் தாக்கம் இருக்கலாம்.

8.யாரைப் போல் எழுத வேண்டும் என்று விரும்புவீர்கள்?

தாமரையைப் போல எழுத விரும்புகிறேன். 

9.யார் உங்கள் எழுத்தைப் பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்?

கவிஞர் ஷண்முகம் சுப்ரமண்யம்.

10. யார் விமர்சிக்கவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்?

பத்ரிக்கையாளர் கே என் சிவராமன்.

11. உங்கள் குடும்பம் நீங்கள் எழுதுவதை ஆதரிக்கிறதா?

ஆம். நான் எழுதுவதற்குத் தடையாக இல்லை. ஓரிரு சமயம் இது எதற்கு என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. ஆனால் எனக்கான வடிகாலாக நான் இதைப் பற்றிக் கொண்டிருப்பதால் இப்போதெல்லாம் போகட்டும் என்று விட்டு விட்டார்கள். ( தண்ணீர் தெளித்து விட்டார்கள் என்றும் சொல்லலாம் J

12. உங்கள் அனுபவங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடைவீர்கள்?

என் கணவரிடமும் என் பிள்ளைகளிடமும். என் மூத்தமகன் தோழனைப் போல வழி நடத்துவான். என் சின்ன மகனும் பங்கு கொள்வான்.

13.எழுதும் போது நெருக்கடியை உணர்ந்திருக்கிறீர்களா?

யாரைப்பற்றியும் தனித்தகவல்களை எழுதிவிடுவோமோ, அதற்கு யாரெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பார்களோ என சிலசமயம் யோசித்து யோசித்து எழுதியதுண்டு. எழுத்தை வாசித்து விமர்சித்தால் பரவாயில்லை. அநாவசிய விவாதத்துக்கு இழுத்துவிடுவார்களோ என்று மிரண்டு சொல்ல வந்ததை எப்போதுமே முழுமையாகச் சொன்னதில்லை. என்னால் இன்னும் ஷார்ப்பாகச் சொல்லமுடியும் என்பதை நான் உணர்ந்திருந்தும் சூழ்நிலைக் கைதியாக என் ஸ்திதியில் நான் நிலைத்திருக்கும் பொருட்டு எதையுமே கிரிப்பாகக் கூடச் சொன்னதில்லை என்பதே உண்மை.

14. எழுத நினைத்ததை முழுமையாக வெளிப்படுத்திய திருப்தி இருக்கிறதா?

ஓரளவு இருக்கிறது. எழுத வேண்டியது ஏராளம் இருப்பதால் இன்னும் தெளிவாக சுருக்காக நறுக்காகச் சொல்லவேண்டும் என்ற விழைவும் இருக்கிறது. எனக்கான தளம், நேரம், முழுமையான சுதந்திரம் அமையும்போது இன்னும் நேர்படச் சொல்வேன்.

15.இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?

நிறைவு இல்லாததால் அடுத்தடுத்து சிறப்பானதை எழுதி வைக்கவேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. எப்போது எனக்கான நேரம் அமையும் என்று காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நிச்சயம் என்னிடமிருந்து காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

16.பொதுவாக என்ன பொருள் பற்றி எழுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்?

அன்பு, பாசம், மனித நேயம், காதல், பெண்களின் எண்ணப் போக்கு, பெண்களின் வாழ்வியல் பார்வை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தெய்வ நம்பிக்கை, வாழ்வில் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள், குழந்தைகள், பூக்கள், இயற்கை. இன்னும் என் போன்ற பெண்களுக்கான உடல்நல, மனநல விஷயங்கள், ஆண்களின் மாறிவரும் பொருளாதார உத்யோக சூழல்கள், குடும்பப் பொறுப்புகள், தற்காலப் பெண்களுடன் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றையும் எழுத எண்ணியுள்ளேன். 

17.உங்கள் கவிதையை வாசிப்பவர்கள் என்ன கருத்தை சொல்கிறார்கள்?

பல கவிதைகள் அருமையாகவும் சில கவிதைகள் இன்னும் செம்மைப்பட வேண்டும் எனவும் சொல்கிறார்கள். என்னால் சீரிய விஷயங்களையும் படைக்க முடியும் என நம்புகிறேன்.

18.வேற்றுமொழி இலக்கியங்களை வாசித்து இருக்கிறீர்களா?

நிஸிம் இசக்கியேலின் ஹிம்ஸ் இன் டார்க்னெஸ். ( சிலவற்றை இருளின் கீதங்கள் என மொழிபெயர்த்துள்ளேன் )




டென்மார்க் நாவலாசிரியை சிக்ரிட் அண்ட்செட்டின் சில எழுத்துக்கள்.



ரோமானிய அறிவுஜீவி ஆக்டேவியன் பேலரின் சில கவிதைகள். ( எல்லாவற்றிற்கும் நமக்கு நேரம் இருக்கிறது - என்ற கவிதையை மொழிபெயர்த்துள்ளேன்.)


கன்னட மொழியிலிருந்து திரு . காளிமுத்து நல்லதம்பி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொட்டு விரியும் சத்தம் என்ற கவிதைத் தொகுதியை வாசித்திருக்கிறேன்.

பாட்டியின் கனவுகள்சிவராம காரந்த். ( முக்கஜ்ஜீய கனஸுகளு - தமிழில் DR. டி பி சித்தலிங்கையா).

மௌனத்தின் குரல் – சுசீலா தேஷ்பாண்டே.

குற்றமும் தண்டனையும், அசடன் – ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி – சுசீலாம்மா மொழிபெயர்ப்பு.



மந்திரப்பூனை, மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர். – சுகுமாரன் மொழிபெயர்ப்பு.



ஏழைபடும் பாடு – விக்டர் ஹியூகோ.

மிக்கேல் ஷோலகேவின் ரஷ்யச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு

கே என் மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் இரவில் நான் உன் குதிரை என்ற 17 நாடுகளையும் மொழியையும் சார்ந்த சிறுகதைகள்.

http://honeylaksh.blogspot.in/2012/12/blog-post_11.html

விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர் - நல்லதம்பி மொழிபெயர்ப்பு.

மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள் - கே வி ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பு.

ப்ரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம்.

ரோண்டா பைரனின் ரகசியம் - சீக்ரெட் - தமிழில் குமாரசாமி

தியோடர் பாஸ்கரனின் - பாம்பின் கண் - தமிழில் லதானந்த்.

மிராஸ்லாவ் ஹோலூப்பின் கவிதைகள்

ஓநாய் குலச்சின்னம்

கினோ - ஹாருகி முரகாமி

கசாக்கின் இதிகாசம்

19.அதில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

கன்னட கவிஞர் பி லங்கேஷ். , வைக்கம் முகம்மது பஷீர், போலந்தின் ஐசக் பாஷவிஸ் சிங்கர் , பிரிட்டிஷ் நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப், சித்ரா திவஹருண்ணி, ஹாருகி முரகாமி, ப்ரான்ஸ் காஃப்கா. 

20.பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்திருக்கிறீர்களா?

படித்திருக்கிறேன். ( அகநானூறு, ஐங்குறுநூறு, கம்பராமாயணம் இவற்றில் சில பகுதிகள், அகத்திணை, மருதத்திணை பற்றிய ஆய்வு நூல் )  மற்றும் பாடப்பகுதியில் இடம்பெற்ற நூல்கள்.

21.உங்கள் மொழியை வளப்படுத்த என்ன வாசிப்பீர்கள்?

பழந்தமிழ் இலக்கியங்கள், மரபுக் கவிதைகள் மட்டுமல்லாமல் புதியனவையையும் ஓரளவு வாசிப்பேன்

22.சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது ?

சீரற்று இருக்கிறது. ஓரிடத்தில் சுப்பீரியராகவும் ஓரிடத்தில் இன்ஃபீரியராகவும். ஓரிடத்தில் பெண்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது, ஆண்கள் நலிந்துகொண்டிருக்கிறார்கள். ஓரிடத்தில் ஆண்கள் ஆட்சி செய்ய பெண்கள் இன்னும் பயந்தவர்களாகவும் முடிவெடுக்கத்தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். சொல்லப்போனால் வேலைக்குப் போகும் பெண்கள் நிலை முன்னதாகவும், வீட்டிலிருக்கும் பெண்களின் நிலை பின்னதாகவும் இருக்கிறது.

23.ஆண்-பெண் சமத்துவம் இருக்கிறதா?

சில இடங்களில் ஆணும் சில இடங்களில் பெண்ணும் டாமினேட் செய்கிறார்கள். இருபாலாரும் சமத்துவமாக வாழ்வது சில இடங்களில் மட்டுமே சாத்யப்படுகிறது. வெளிநாடுகளைப் போல ஆணும் பெண்ணும் தங்கள் தங்கள் சம்பாத்தியத்தையும் தனித்தன்மையையும் விட்டுத்தருவதாகவோ விட்டுக்கொடுப்பதாகவோயில்லை.

24.இப்போதிருக்கும் நிலையை மாற்ற என்ன செய்யவேண்டும்?

இருவரும் சமம் என்று சொல்லி வளர்ப்பதோடு அல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், குடும்பத்தில் இருக்கும் ஏனையோரை மதிக்கவும் தனது சுய அத்யாவசியத்தேவைகளைச் செய்துகொள்ளவும் பழக்க வேண்டும். புரிதல் மற்றும் பிரியம் பற்றிய ஆரம்பக் கல்வி அவசியம். இருபாலாருக்கும் கவுன்சிலிங் தேவை. சமூகம், சாதி , மதம்  சார்ந்த கட்டுப்பாடான திருமணங்களை விட இருமணம் ஒத்த காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம்.

25.நீங்கள் எழுதுவது உடனடியாக ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா?

ஓரளவு. ஏனெனில் நல்ல மாற்றம் மெல்ல மெல்லத்தானே மனதில் புகும். விளைவுகள் மெல்ல ஏற்பட்டாலும் அதன் தாக்கம் நல்லதாக இருக்க வேண்டும் என நினைப்பேன். ஏனெனில் நாம் நல்லதைச் சொன்னாலும் வாசிப்பவரின் அனுபவத்தில் அது எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதும் முக்கியம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.


தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்





8 கருத்துகள்:

  1. "அனைத்திற்கும் எனது புன்னகையும் ஒரு காரணம்" என்கிற வரியை எந்த பதிலிலும் ஏன் சொல்லவில்லை சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. அருமை. வாழ்த்துகள். உங்கள் வாசிப்பனுபவம் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள் செம! அருமை. நீங்கள் நிறைய வாசிக்கின்றீர்கள் என்று தெரிகிறது. வாழ்த்துகள்! சகோ/தேனு

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான நேர்காணல். ஒரு கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், குடும்பத் தலைவி, ஆகிய எல்லா தளங்களிலும் தாங்கள் பெற்ற அனுபவங்கள், வெற்றிகள் பற்றி முழுமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. அஹா.. நன்றி டிடி சகோ !!!!!!!!!!!

    நன்றி மின் நூலகம்

    நன்றி ஸ்ரீராம் :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  6. நேர்மையான, முற்போக்கான வெளிப்பாடு.. சிகரம் நோக்கிய பயணத்திற்கு அன்பின் வந்தனங்கள்..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...